இயக்குநர் கொலை - நடிகைக்கு சம்மன்
புதுமுக இயக்குநர் செல்வா கொலை வழக்கில் சிக்கி கைதாகி, ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் நடிகை சங்கீதா விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
புதுமுக இயக்குநரான செல்வாவிடம் உதவியாளராக இருந்து வந்தார் சங்கீதா. அவர் இயக்கி வந்த படங்களில் சிறு ரோல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் செல்வா தான் தங்கியிருந்த அறையில் பிணமாகக் கிடந்தார். அதற்கு முதல் நாள் இரவு முழுவதும் செல்வாவுடன், சங்கீதா தங்கியிருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து சங்கீதாவை போலீஸார் கைது செய்தனர். தற்போது சங்கீதா ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் தனது கணவர் சாவில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் கொலை செய்யவில்லை என்று கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டபோது செல்வாவின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல்தான் கொலை செய்ததாக சங்கீதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமீனில் விடுதலையாகி வந்து விட்ட சங்கீதா தற்போது உடல் நலம் சரியில்லை என்று கூறி திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது வக்கீல் சாலமன் கூறுகையில், அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இந்த நிலையில் சங்கீதாவிடம் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ள சிபிசிஐடி, போலீஸார் விசாரணைக்கு வருமாறு கூறி சங்கீதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











