மேலும் ஒரு இழப்பு.. வார்த்தையே வரலை.. நடிகர் பாண்டு மரணம்.. திரைத்துறை பிரபலங்கள் உருக்கம்!
சென்னை: நடிகர் பாண்டுவின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் பாண்டு.
நடிகர் இடிச்சப்புளி செல்வராஜின் சகோதரரான பாண்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

கொரோனா பாதிப்பு
காதல்கோட்டை, அழகி, வரலாறு, கில்லி, வில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் பாண்டு. இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மனைவி ஐசியூவில்
இந்நிலையில், இன்று அதிகாலை பாண்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

பிரபலங்கள் இரங்கல்
கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். பாண்டுவின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சரத்குமார்
சிறந்த குணச்சித்திர நடிகரும், என்னுடன் பல திரைப்படங்களில் உடன் நடித்தவரும், நல்ல நண்பருமான பாண்டு மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
நடிகர் மனோ பாலா
நடிகர் மனோ பாலா பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில் ரிப் பாண்டு.. இன்று காலை கொரோனாவால் பாண்டு காலமானார் என பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்
இதேபோல் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பதிவிட்டுள்ள டிவிட்டில், சில நாட்கள் சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருப்பது நல்லது.. இன்று காலை இந்த செய்தியை படித்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். ரிப் பாண்டு சார், சிறந்த மனிதர்கள் மற்றும் நடிகர்களில் ஒருவர். சில நாட்கள் ஹோம் குவாரன்டைனில் இருக்க போகிறேன். வீட்டில் பாதுகாப்பாய் இருங்கள் நண்பர்களே.. சவாலான நாட்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஷாந்தனு
நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், கொரோனாவால் மற்றொரு இழப்பு.. ரிப் பாண்டு சார் என பதிவிட்டுள்ளார்.
வனிதா விஜயக்குமார்
நடிகை வனிதா விஜயக்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், எனக்கு வார்த்தையே வரவில்லை. அற்புதமான மனிதர்.. மரணம் தவிர்க்க முடியாத ஒன்று.. ஆனால் கொரோனா பலரை கொல்கிறது.

இயக்குநர் எஸ்ஜே சூர்யா
இதேபோல் இயக்குநர் வெங்கட்பிரபு, இயக்குநர் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் நடிகர் பாண்டுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தொடரும் கொரோனா மரணங்கள் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











