விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு தூபம் போட்ட பிரபலங்கள் - ரசிகர்கள் ஆரவாரம்
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விஜய் இந்த விழாவில் அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரசியல் பேசாமல் 'மெர்சல்' பற்றி மட்டுமே பேசினார். விழாவில் பேசிய பலரும் நடிகர் விஜய்யைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் பார்த்திபன் ஆகியோர் பேசியதைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தமிழன் ஆளணும் :
இந்த விழாவில் லைவ் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான் பிறகு பேசும்போது, 'ஆளப்போறான் தமிழன் என்கிற வரிகள் உண்மையாக வேண்டும். அது எந்தத் துறையில் வேண்டுமானால் இருக்கலாம்' என சூசகமாக விஜய்யின் அரசியல் என்ட்ரிக்காகக் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி தங்கள் ஆதரவைக் காட்டினர்.

ஜல்லிக்கட்டு பிரச்னை..?
படத்தின் இயக்குநர் அட்லீ, மெர்சல் படத்தின் கதை பற்றிப் பேசும்போது, 'இன்றைய நவீன காலத்தில் மறந்திருந்த நம்முடைய பாரம்பரியத்தை ஜல்லிக்கட்டு போன்ற விஷயத்தில் மீட்டெடுத்து வருகிறோம். அது போன்று ஒரு விஷயத்தை உரக்கச்சொல்லும் படமாகத் தான் இந்த மெர்சல் படம் இருக்கும்.' என்றார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும், டைட்டில் டிஸைனிலும் காளை மாட்டின் அமைப்பு இருந்ததால் இந்தப் படம் ஜல்லிக்கட்டு பற்றியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது அட்லீயின் பேச்சு மூலம் தெளிவாகியுள்ளது.

ரசிகர்களின் பலம் :
'இங்கே இருக்குற ரசிகர்களோட எனர்ஜிய பாருங்க... இந்த எனர்ஜி அப்படியே மாறி வேற ஏதாவது செய்யும்' என எஸ்.ஜே.சூர்யா பேசினார். அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் குறிப்பிட்டதுபோல் இருந்த அவரது பேச்சுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பிரபலங்கள் விஜய்யைப் பற்றிப் புகழ்ந்தும், அவரை வரவேற்றும் பேசியவற்றிற்கு எல்லாம் விஜய் வெட்கம் கலந்த புன்னகைகோடு குனிந்தபடி அமர்ந்திருந்தார்.

விஜய் தான் சி.எம் :
விழாவில் பார்த்திபன் பேசும்போது, 'ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் இணைஞ்சா என்னாகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் சேர்ந்தால் அவர்தான் சி.ம்' என்றார். ரசிகர்களின் விசில்களுக்கு இடையே கொஞ்சம் இடைவெளிவிட்டு சி.எம்-னா கலெக்ஷன் மன்னன் என்றார். ரசிகர்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. பார்த்திபனின் வழக்கமான நையாண்டி, சர்காஸ பேச்சுகள் இந்த முறை குறைவு.


Click it and Unblock the Notifications











