இனி செல்போனில் பாடல்களை திருட்டுத் தனமாக பதிவு பண்ண முடியாது!

சவுத் இண்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மென்ட் பி.லிட் நிறுவனம், சவுத் இண்டியா மியூசிக் கம்பெனி அசோசியேஷனுடன் இணைந்து இந்த இசைத் திருட்டுக்கு முடிவு கட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.
இந்த நிறுவனம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்களை 50 முதல் 60 சதவீதம் வரை தயாரித்து வழங்கக்கூடியவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது. 30 வருடங்களுக்கு மேலான சூப்பர் ஹிட் பாடல்களின் உரிமம் பெற்றுள்ள இந்நிறுவனம், 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி பாடல் இசையை பதிவு செய்ய உரிமம் பெறுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
இதற்காக செல் மியூசிக் (CELL MUZIK) என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க மற்றும் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் தினா, பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், பத்மஸ்ரீ சுதா ரகுநாதன், பாடலாசிரியர் விவேகா, முன்னாள் காவல் துறை அதிகாரி மாதவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுபோல திருட்டுத்தனமாக பாடல்களை பதிவு செய்து விற்கும் செல்போன் கடைகள் இனி மாதந்தோறும் 1250 செலுத்தி சந்தாதாரராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் திருட்டுத்தனமாக விற்றால் 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி குற்றம்.
உரிமம் பெறாமல் பாடல்களை மொபைல் சிப்பில் பதிவு செய்பவர்களை கண்காணித்து தண்டிக்க முன்னாள் காவல் துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது இந்த அமைப்பு.


Click it and Unblock the Notifications











