திமுக பிரமுகர் படத்திலிருந்து நித்யானந்தா, தேவநாதன் காட்சிகள் நீக்கம்!

இந்து மதத்தின் பெயரால் ரஞ்சிதா போன்ற நடிகைகள் மற்றும் இளம் பெண்களுடன் காமக் களியாட்டம் நடத்திய நித்யானந்தா, காஞ்சீபுரத்தின் புராதனமான வைகுந்தப் பெருமாள் கோயில் கருவறையிலேயே பெண்களுடன் உல்லாசம் புரிந்து அதை வீடியோவும் எடுத்து வைத்த அர்ச்சகர் தேவநாதன் ஆகியோரை மையமாக வைத்து வில்லாளன் என்ற பெயரில் புதுப்படம் தயாராகி உள்ளது.
இதில் புதுமுகம் வெற்றி வேல் நாயகனாகவும், சுஷ்மிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். வெற்றிவேல் - சூரியன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். திமுக முன்னாள் எம்எல்ஏவும் நங்கநல்லூர் வேலன் திரையரங்க உரிமையாளருமான கண்டோன் மென்ட் சி.சண்முகம் தயாரித்துள்ளார்.
இந்த படம் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நித்யானந்தா, அர்ச்சகர் தேவநாதன் பற்றி இடம் பெற்றுள்ள காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். படத்துக்கு அனுமதி அளிக்கவும் மறுத்து விட்டனர்.
படத்தில் கதாநாயகன் வெற்றிவேல் போலீஸ் உதவி கமிஷனராக நடித்துள்ளார். அவரிடம் நித்யானந்தா வேடத்தில் வருபவர் மீது செக்ஸ் புகார் கூறி பெண்கள் புகார் அளிப்பது போலவும், இதையடுத்து நித்யானந்தா கைதாவது போலவும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
இதேபோல் அர்ச்சகர் தேவநாதன் வேடத்தில் வருபவர் கோவிலில் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்றும் அவற்றை செல்போன் கேமராவில் படமாக்கி போலீ சில் சிக்குவது போன்றும் காட்சிகள் இருந்தன.
நித்யானந்தா, தேவநாதன் வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருவதால் அந்த காட்சிகள் இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் எதிர்த்தனர்.
நடந்த சம்பவங்களைதான் காட்சியாக்கியுள்ளோம் என்று இயக்குனர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் நித்யானந்தா, தேவநாதன் காட்சிகளை தணிக்கை குழுவினர் வெட்டி நீக்கி விட்டு யூ சான்றிதழ் அளித்தனர்.
இதுபற்றி இயக்குனர்கள் வெற்றிவேல், "சூரியன் ஆகியோர் கூறும்போது, நித்யானந்தா, அர்ச்சகர் தேவநாதன் காட்சிகளை ஒரு பாடலில்தான் வைத்திருந்தோம். அதை தணிக்கை குழுவினர் அனுமதிக்காமல் வெட்டி நீக்கி விட்டனர். நடந்த உண்மைகளை மக்களிடம் சொல்வதைக் கூட தடுக்கிறார்களே... இந்த எந்த மாதிரி கருத்து சுதந்திரம் என்று புரியவில்லை," என்றனர்.


Click it and Unblock the Notifications











