twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துளி

    By Staff
    |

    நான் விழுந்தால் எழுந்திருக்க முடியாத யானை அல்ல, விருட்டென எழுந்து பாய்ந்தோடும் குதிரை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள சந்திரமுகி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது.கேசட் மற்றும் சி.டியை பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே வெளியிட்டார்.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சீனிவாசன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் டி.ஜி. தியாகராஜன்ஆகியோர் முதல் கேசட் மற்றும் சிடியைப் பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், தனது அரசியல் எதிரிகளுக்குப் பஞ்ச் வைத்துப் பேசினார். ரஜினியின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

    ஜக்குபாய் படத்தின் கதை குறித்த விவாதத்தின்போது அந்தக் கதையில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. காரணம் அது பாட்ஷா படக்கதையைப் போலவே இருந்தது.

    இன்னொரு பாட்ஷாவை நான் செய்ய விரும்பவில்லை. எனவே வேறு ஒரு கதையைக் கொண்டு வாருங்கள் என்று ரவிக்குமாரிடம்கூறியிருந்தேன்.

    இதன் பிறகு நான் கேரளாவுக்கு சென்றிருந்தேன். நான் வழக்கமாகப் படிக்கும் பகவத் கீதையை அங்கும் அமைதியான சூழலில் படித்தேன்.அப்போது எனக்கு ஒரு புதிய சிந்தனை தோன்றியது.

    அதாவது, போர்க்களத்தில் அர்ஜூனன் ஒரு புறம், கெளரவர்கள் எதிர்புறம் நிற்கின்றனர். தேரோட்டியாக வந்த கண்ணன், அம்புகளை எய்திகெளரவர்களைத் தாக்குமாறு அர்ஜூனனுக்கு கட்டளையிடுகிறான்.

    ஆனால் என் முன் நிற்பவர்கள் அனைவரும் எனது உறவினர்கள், சகோதரர்கள், எப்படி நான் அவர்களைத் தாக்குவேன் என்று தயங்குகிறான்அர்ஜூனன்.

    அப்போது கண்ணன் உபதேசம் செய்கிறான். அவர்கள் உன் உறவினர்கள் என்று நினைத்து நீ தயங்கினால், பயந்து ஓடுகிறான், கோழை என்றுஇழிவாகப் பேசுவார்கள்.

    உனது கடமையிலிருந்து நீ தவறக் கூடாது என்று அறிவுரை கூறுகிறார். இதைப் படித்தவுடன் எனக்குள் ஒரு வேகம் வந்தது.

    உடனடியாக ஏதாவது ஒரு படத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் பி.வாசுவின் ஆப்தமித்ரா குறித்துதெரியவந்தது.

    படத்தைப் பார்த்தேன். ரொம்பவே பிடித்து விட்டது. உடனடியாக இதை ஆரம்பித்தோம். 3 வருடங்களுக்கு முன்பு பாபா படம் செய்தோம்.அது சரியாக போகவில்லை.

    உடனே, ஆஹா, அண்ணன் அவ்வளவுதான் என்று சிலர் கேலி பேசினார்கள், எள்ளி நகையாடினர். ஆனால் அதைக் கேட்டு நான் பயந்துவிடவில்லை.

    காரணம், நான் சறுக்கி விழுந்தால் எழுந்திரிக்க முடியாத யானை அல்ல, மாறாக பாய்ந்து ஓடும் குதிரை. எனவே உடனே எழுந்து விட்டேன்.

    சந்திரமுகி மூலம் மீண்டும் வேகம் எடுத்து ஓடப் போகிறேன். பி.வாசு பேசும்போது சொன்னார். நான் இந்தப் படத்தில் மிகவும் அழகாகவந்திருக்கிறேன் என்று.

    அது சினிமாவுக்காக மேக்கப் போட்டு செய்த செட் அப். வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே நம்மை விட்டுப்போய் விடும். அது ஆரோக்கியம், அழகு, நல்ல நேரம்.

    இது இருக்கும் வரை அது நமக்குப் புரியாது, தெரியாது. ஆனால் போகும்போதுதான் அதை நாம் உணர்ந்து கொள்வோம். பிரபுவின்சித்தப்பா சண்முகம் குறித்து நிறையக் கேள்விப்பட்டுள்ளேன்.

    ரொம்பவும் பர்பக்ட் என்று கூறுவார்கள். அதேபோல, ராம்குமாரும், பிரபுவும் ரொம்ப பர்பக்ட். படப்பிடிப்பில் எனக்கு எந்த டென்ஷனும்ஏற்படாமல், ஒரு குழந்தையைப் போல பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

    சிவாஜி பிலிம்ஸ் இனிமேல் வருடத்திற்கு 2 படங்கள் செய்ய வேண்டும். இது எனது வேண்டுகோள், ஆசை.

    சந்திரமுகி ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நானும் அழகாக காட்டப்பட்டுள்ளேன். தமிழ்ப் பட வரலாற்றில் இதுமாதிரியான ஒரு படம்இதுவரை வந்ததில்லை என்று நிச்சயம் பேசப்படும்.

    சந்திரமுகி குறித்து இப்போது நான் அதிகம் பேசவிரும்பவில்லை. என்னைக் கேலி செய்தவர்களுக்கும் சேர்த்து, சந்திரமுகியின் வெற்றிவிழாவில் விரிவாக, விலாவாரியாக பேசுவேன் என்றார் ரஜினி.

    நிகழ்ச்சியில் பிரபுவின் சகோதரர் ராம்குமார், பிரபு, ஆஷா போன்ஸ்லே, வாலி, பி.வாசு ஆகியோரும் பேசினர். பிரபு பேசும்போது,சந்திரமுகியில் எங்களுக்கு ஆக்சிஜனாகவும், தண்ணீராகவும் இருந்தார் ரஜினி. அதை நாங்கள் மறக்க மாட்டோம் என்றார்.

    பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சிவாஜி கணேசன் விருதும் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது. எம்.எஸ்.வி.பொன்னாடை போர்த்தி, கெளரவிக்கப்பட்டார்.

    நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், ரவி, ஜீவா, விஜயக்குமார், நடிகைகள் ஜோதிகா, நயனதாரா, பழம்பெரும் மலையாள நடிகை ஷீலா,எம்.என்.ராஜம், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி, ராஜா, மனோபாலா, பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X