தண்ணீரும் தண்ணீர் சார்ந்த பிரச்சினையும்... சண்டிவீரன் கதை
சென்னை: மூன்றாம் உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காக மட்டுமே மூளும் என்று ஒரு கருத்து உலகம் முழுவதும் இருக்கிறது, அதை உறுதிப்படுத்துவது போல அவ்வப்போது தண்ணீர் சம்பந்தமான பிரச்சினைகள் பெரிய அளவில் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
மனித உயிருக்கு ஆதாரமும் அடிப்படையாகவும் விளங்கும் தண்ணீரை அடிப்படையாக வைத்து மண் மணம் மாறாமல் ஒரு கதையை கொடுத்து மீண்டும் பார்முக்குத் திரும்பியிருக்கிறார் சற்குணம்.
தொடர்ந்து தோல்விப் படங்களால் தவித்து வந்த அதர்வாவுக்கு இந்தப் படம் ஒரு மிகப்பெரிய ஆறுதலையும் வெற்றியையும் ஒருசேர அளித்திருக்கிறது, சண்டிவீரன் கதை மற்றும் நடித்தவர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
சண்டிவீரன் கதை
ஊருக்குள் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் அதர்வா ஒரு நாள் வீரனாக மாறும் போது அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் கூறுவதே சண்டிவீரன் திரைக்கதை.
நாயகன் அதர்வா ஊர்த் தலைவரின் மகளை (ஆனந்தி) காதல் செய்து கொண்டு ஜாலியாக பொழுதைப் போக்குகிறார் ஒரு ஊரில் உள்ள பெரியவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பக்கத்து ஊருக்கு தண்ணீர் விடாமல் அநியாயம் செய்கிறார்கள், இதனை நேரில் காணும் அதர்வா இந்த அநீதிக்கு எதிராக களமிறங்குகிறார்.
இந்தத் தண்ணீர் போராட்டத்தால் அதர்வாவின் தந்தை இறந்தது அதர்வாவிற்குத் தெரிய வருகிறது எனவே போராட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது, ஊர்த்தலைவரான லாலுக்கு அதர்வா தனது மகளை காதலிப்பது தெரிய வருகிறது.
இதற்கிடையில் 2 ஊர்களுக்கும் இடையில் கலவரம் வெடிக்கிறது, இந்தக் கலவரத்தில் அதர்வாவை தீர்த்துக் கட்டி தனது மகளின் காதலிற்கும் ஊர்க் கலவரத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறார் லால்.
தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்ததா? அதர்வா - ஆனந்தி காதல் என்னவானது என்பதே சண்டிவீரன் படத்தின் கிளைமாக்ஸ்.

அதர்வா
2010 ம் ஆண்டில் பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா தமிழ் சினிமாவில், ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சண்டிவீரன் வெளியாகி அதர்வாவின் போராட்டத்திற்கான வெகுமதியாக மாறியிருக்கிறது.
இறுகிய உடற்கட்டும் அளவான நடிப்புமாக சண்டிவீரனில் கலக்கியிருக்கிறார் அதர்வா, கிராமத்து இளைஞனாக வந்து ரசிகைகளின் நெஞ்சத்தைக் கவர்ந்திருக்கும் அதர்வாவுக்கு சண்டிவீரன் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.
ஆனந்தியுடனான காதல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் தூள் கிளப்பியிருக்கிறார், சற்குணத்தின் சண்டிவீரனுக்கு சரியான தேர்வுதான் அதர்வா முரளி.

ஆனந்தி
ஊர்த் தலைவரின் மகளாக வந்து அதர்வாவைக் காதலிக்கும் வேடம் நாயகி ஆனந்திக்கு, கொடுத்த வேடத்தை சரியாக செய்திருக்கிறார். வழக்கம் போல தன் பெரிய கண்களால் ரசிகர்களைக் கவர்ந்து விட்டார் ஆனந்தி.

சற்குணம்
தொடர்ந்து நல்ல படங்களாக கொடுத்து வந்த சற்குணதிற்கு நையாண்டி படம் சரியான அடியைக் கொடுத்தது, நையாண்டியில் சறுக்கியதை சண்டிவீரனில் மீட்டிருக்கிறார் சற்குணம். மண் மணத்துடன் காதல் மற்றும் ஆக்க்ஷன் என எல்லாவற்றையும் சரியாகக் கொடுத்து இழந்த பார்மை மீட்டெடுத்து இருக்கிறார். தஞ்சை பகுதிகளின் அழகை கண்முன்னே காட்டியது மற்றும் படத்தின் நீளம் குறைத்து ரசிகர்களையும் திருப்திப் படுத்தியது போன்ற விஷயங்களில் சண்டிவீரனை ரசிகர்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்த்து விட்டார் சற்குணம்.

பாலா
அதர்வா கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டிய ஒரு நபராக மாறியிருக்கிறார் பாலா, ஏற்கனவே பரதேசி படத்தின் மூலம் அதர்வாவிற்கு ஒரு நல்ல பிரேக்கை கொடுத்த பாலா தற்போது சண்டிவீரன் படத்தைத் தயாரித்ததன் மூலம் அதர்வாவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நபராக மாறியிருக்கிறார்.

அசத்திய இசையமைப்பாளர்கள்
படத்திற்கு சபேஷ் முரளி மற்றும் பாடல்களுக்கு அருணகிரி என இருவர் இல்லை இல்லை மூவர் இசையமைப்பில் சண்டிவீரன் மிளிர்ந்து நிற்கிறது, பாடல்களிலும் சரி சண்டைக் காட்சிகளிலும் சரி எந்த விதத்திலும் சறுக்காத இசை சண்டிவீரனுக்கு சாத்தியமாகியிருக்கிறது.

கிராமத்துக் கதைகள்
எவ்வளவு சிட்டி சார்ந்த படங்கள் வந்தாலும் கிராமத்துப் படங்களுக்கான வரவேற்பு என்றுமே குறைவதில்லை ரசிகர்களிடம், அதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறான் இந்த சண்டிவீரன்.
சண்டிவீரன் - பார்க்க வேண்டிய படம்.


Click it and Unblock the Notifications











