எலி படத்தில் மோசடி பண்ணிட்டார்..!- வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை: எலி படத்தில் தன்னை வடிவேலு மோசடி செய்துவிட்டதாகக் கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.
வடிவேலு ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் எலி. இந்தப் படம் பெரிய நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த வடிவேலு தன்னை மோசடி செய்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், ரூ 12 கோடிக்கு இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் வடிவேலுவுக்கு சம்பளமாக மட்டும் ரூ 8 கோடி கொடுத்ததாகவும், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சேனலில் ரூ 10 கோடி வரை தரத் தயாராக இருந்தும் அதனை வாங்க விடாமல் வடிவேலு தடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வேறு சேனல்கள் எதுவும் இந்தப் படத்தை வாங்காமல் விட்டதால், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்துக்குமே வடிவேலுதான் காரணம் என்றும் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











