'தங்க நகை திட்டத்துல ஏமாத்திட்டாங்க...' பிரபல நடிகை மீது வெளிநாடு வாழ் இந்தியர் மோசடி புகார்
சென்னை: பிரபல ஹீரோயின் மற்றும் அவரது கணவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில், மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தவர், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. பிறகு விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள இவரது கணவர், ராஜ் குந்த்ரா. இவர் தொழிலதிபர்.

தங்கத்துக்கான அட்டை
நடிகை ஷில்பா ஷெட்டியும் அவர் கணவர் ராஜ் குந்த்ராவும் சத்யுக் என்ற தங்க நகை வியாபார நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சச்சின் ஜோஷி என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு ரூ.18 லட்சத்து 58 ஆயிரத்துக்கு சுமார் ஒரு கிலோ தங்கத்துக்கான நகை திட்டத்தில் இணைந்திருந்தார்.

தங்கம் வாங்குவதற்காக
இந்த திட்டம் ஐந்து வருடத்துக்கானது. 5 ஆண்டுகளுக்கு பின் அவருக்கு அந்த ஒரு கிலோ தங்கம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாம். ஐந்து ஆண்டு முடிவடைந்த நிலையில், தங்கத்தை வாங்குவதற்காக, மும்பையில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்றார் சச்சின் ஜோஷி. அப்போது அந்த அலுவலகம் மூடப்பட்டு இருந்தது.

ராஜினாமா
அதிர்ச்சியடைந்த அவர் விசாரித்தபோது, அந்த தங்க நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பை நடிகை ஷில்பாவும் ராஜ் குந்த்ராவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ராஜினாமா செய்தது தெரிய வந்தது. இது சச்சின் ஜோஷிக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இதை தாங்க முடியாத சச்சின் ஜோஷி, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை கர் போலீசில் புகார் அளித்தார்.

மறுப்பு
இதுபற்றி கர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தரப்பில் கூறும்போது இந்த வழக்கில் இன்னும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. விசாரித்து வருகிறோம் என்றனர். இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, சச்சின் ஜோஷியின் அந்தப் புகாரை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











