கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி மறுப்பு
Recommended Video
சென்னை: எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாண்டவர் அணியும், சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நடிகர் சங்க தேர்தலை அந்த கல்லூரியில் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து நடிகர் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தலை நடத்த மாற்று இடத்தை பரிந்துரை செய்யுமாறு நடிகர் சங்கத்தை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே 23ம் தேதி தேர்தல் நடக்காது என்று சிலர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நடத்த தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பாக இப்படி ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.
இது குறித்து பாண்டவர் அணியின் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நீதியரசர் பத்மநாபன் அவர்கள் மூலமாக பார்வையிட்டு அதன் பிறகே அந்த கல்லூரியில் தேர்தலை நடத்த முடிவு செய்தோம். ஆனால் தற்போது அங்கு தேர்தல் நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தேர்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.வி. சேகர் அதே கல்லூரியில் நாடகம் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு பின்னால் ஆளுங்கட்சியினர் மூலமாக ஐசரி கணேஷ் பல வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். ஐசரி கணேஷுக்கு தேர்தலை சந்திக்க விருப்பம் இல்லை.
தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் ஐசரி கணேஷ். எதிரணி சுவாமி சங்கரதாஸ் அணி அல்ல அது ராதாரவி அணி என்றார்.
முன்னதாக நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் மறுத்தனர். அதற்கு பின் சிலரின் சதிவேலை இருப்பதாக நாசர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு பின்னால் ஐசரி கணேஷ் இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











