சென்னை 28: பார்ட் 2 கண்டிப்பா வரும்.. வெங்கட் பிரபு நம்பிக்கை
சென்னை: 2007 ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் 2 வது பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007 ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சென்னை 28. ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ் மற்றும் விஜயலட்சுமி நடிப்பில் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து இப்படம் வெளியானது.

பெரிதாக ஹீரோயிசம் இல்லாமல் காமெடி கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியானாலும் வசூலில் குறை வைக்காமல் 12 கோடிகள் வரை இப்படம் வசூலை ஈட்டியது.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் 2 வது பாகத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இது குறித்து "சென்னை 28 படத்தின் 2 வது பாகத்தை உருவாக்கும் எண்ணம் கண்டிப்பாக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களை இதில் நடிக்க வைக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம்.
ஆனால் எல்லாமே வெறும் சிந்தனை அளவில் தான் தற்போது உள்ளது. ஒருநாள் அது கண்டிப்பாக நடக்கும்". என்று சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கூறியிருக்கிறார்.
தற்போது இயக்குநர் கவுதம் மேனனுடன் இணைந்து வெங்கட் பிரபு புதிய படமொன்றை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











