பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்து திடீர் வழக்கு.. என்ன பஞ்சாயத்து தெரியுமா?
சென்னை: வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியது.
500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்திய அந்த திரைப்படம் கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் நம்பர் ஒன் ஆக அனைத்து திரையரங்குகளிலும் முதலிடத்தை பிடித்தது.

பொன்னியின் செல்வன் வழக்கு
சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றை திரித்து
முக்கிய கதாப்பத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திறாக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டி, வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சோழர்களுக்கு அவமதிப்பு
வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவிட வேண்டும்
மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2
இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படியொரு வழக்கு படத்திற்கு சிக்கலாக மாறி உள்ளது. ஆனால், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலே புனைவு நாவல் என்பதால் எந்தளவுக்கு இந்த வழக்கு செல்லுபடியாகும் என்பதும் கேள்விகளை எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











