சர்ச்சை பேச்சு வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமின்... ஆனால் ஒரு கன்டிஷன்
சென்னை : வன்கொடுமை தடுப்பச் சட்ட வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாடலிங் துறையில் பிரபலமானவரான மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் நடிகையானார். தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி, போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். 2019 ம் ஆண்டு விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிரபலங்கள் பற்றி அவதூறு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைவருக்கும் தெரிந்த பிரபலமாகி விட்ட மீரா மிதுன், ரஜினி, விஜய், சூர்யா, ஜோதிகா, த்ரிஷா போன்ற பல டாப் நடிகர், நடிகைகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பல கருத்துக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். பிறகு தான் மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கைது செய்யப்பட்ட மீரா மிதுன்
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத இவர், பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார் இதற்காக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆண்டு போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். பின் அவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இருவருக்கும் எதிரான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் ஜாமீன் கோரி மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜாமின் கிடைச்சாச்சு...ஆனா....
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மீராமிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.


Click it and Unblock the Notifications











