கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா
சென்னை : கடன் பெறுவதற்காக கையெழுத்திட்டு கொடுத்த வெற்று காகிதத்தில், பணத்தை நடிகர் ரஜினி திருப்பி தருவார் என சினிமா பைனான்சியர் போத்ராவே எழுதிக் கொண்டதாக இயக்குனர் கஸ்தூரிராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தன்னிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், இந்த தொகையை தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தி ரஜினி தருவார் என கடிதம் கொடுத்ததாகவும், ரஜினி பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரிராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அபராதம் விதித்தும் வழக்கு
இந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அவர் மறைந்து விட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

கடனை திருப்பி கொடுத்தாச்சு
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது கஸ்தூரிராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 லட்சம் ரூபாய் மட்டுமே போத்ராவிடம் கடன் பெற்றதாகவும், அந்த தொகையை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

ரஜினியை கோர்த்து விட்ட போத்ரா
கடன் பெறுவதற்காக கொடுத்த வெற்று காகிதத்தில், பணத்தை தராவிட்டால் ரஜினி தருவார் என போத்ராவே எழுதிக் கொண்டதாகவும், காவல்துறை விசாரணையிலும், கீழமை நீதிமன்ற விசாரணையிலும் கூட போத்ரா இதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கஸ்தூரிராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

கோர்ட்டில் சந்திக்க தயார்
ரஜினி, சம்பந்தியாக இருந்தாலும், அவருடன் வர்த்தக ரீதியாக எந்த தொடர்பும் இல்லையெனவும், குடும்பத்தினர் பெயரை களங்கப்படுத்தி பணம் பறிக்க முயல்வதால் சமாதானம் செய்து கொள்ள விரும்பவில்லை எனவும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயார் எனவும் கஸ்தூரிராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

மோசடி செய்யும் போத்ரா
சினிமா துறையில் உள்ளவர்கள் மீது திட்டமிட்டு பொய்யான ஆதாரங்களை உருவாக்கி பணம் பறிப்பதையே போத்ரா நோக்கமாக கொண்டு செயல்பட்டதாகவும், ஆண்டுக்கு இது மாதிரி குறைந்தது 150 பேரிடமாவது போத்ரா இவ்வாறு செய்வது வாடிக்கை எனவும் கஸ்தூரிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேள்வி எழுப்பிய கோர்ட்
65 லட்ச ரூபாயை பணமாக கொடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ககன் போத்ராவுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Click it and Unblock the Notifications











