நடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்
சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் ஜூன் மாதம் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கூறி சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து விஷால் மனு அளித்தார். ஆனால் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை மறுத்தது.

காவல்துறையின் நடவடிக்கைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியும் என பாண்டவர் அணியின் தலைவர் நாசர் தெரிவித்தார். இதையடுத்து தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையை உத்தரவிடுமாறு கோரி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விஷாலின் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தலே ரத்து செய்யப்பட்டுள்ளதால் விஷாலின் மனு குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலை ரத்து செய்ய வைக்க சதி நடந்து வருவதாக பாண்டவர் அணியினர் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே விஷால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார்.
பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியை ராதாரவி அணி என்று நாசர் விமர்சித்தார். இந்நிலையில் ராதாரவி கூறியிருப்பதாவது, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய், சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயாவும், பாண்டவர் அணி சொல்வது எல்லாமே பொய் என்று தெரிவித்தார். இந்நிலையில் ராதாரவியும் அதையே தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாண்டவர் அணியும், சுவாமி சங்கதராஸ் அணியும் நாடக கலைஞர்களின் வாக்குகளை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











