சென்னை மழை: மக்களின் உணவு, உடை மட்டுமின்றி..சுகாதாரத்திலும் அக்கறை காட்டிய பார்த்திபன்
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் உணவு, உடை மட்டுமின்றி அவர்களின் சுகாதார விசயத்திலும் அக்கறை செலுத்தி வழக்கம்போல மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறார் நடிகர் பார்த்திபன்.

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு பல்வேறு நடிக,நடிகையரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் தன்னால் முடிந்த உதவிகளை சென்னை மக்களுக்கு வழங்கி வருகிறார். வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளுக்கு ஒரு லாரியில் சென்று இறங்கிய பார்த்திபன் லாரியில் கையோடு கொண்டுசென்ற படகை எடுத்து வெள்ளம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் சென்றார்.

அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிதண்ணீர், உணவு, போர்வைகள் மற்றும் சேலைகள் ஆகியவற்றை பார்த்திபன் தனது உதவியாளர்களுடன் இணைந்து வழங்கினார்.

மேலும் கையோடு கொண்டு சென்ற பிளீச்சிங் பவுடரை தண்ணீர் அதிகம் தேங்கி நின்ற இடங்களில் தூவி விட்டார். முழங்காலுக்கு மேலே செல்லும் தண்ணீரில் நின்று கொண்டு பார்த்திபன் செய்த இந்த செயல் மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

மழையால் வெளியே வரமுடியாமல் இருந்த மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் மற்றும் உணவு ஆகியவற்றையும் பார்த்திபன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











