வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...சத்தமின்றி ரூ. 2 கோடி வழங்கிய தெலுங்கு நடிகர்
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ரூ 2 கோடியை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார்.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கிட்டத்தட்ட தெலுங்குலகின் சூப்பர் ஸ்டார் என்றும் இவரைக் கூறலாம். அந்த அளவிற்கு பவன் கல்யாண் படங்கள் ஆந்திர பூமியில் கல்லா கட்டும்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை சென்னை மற்றும் கடலூர் மக்களை அதிக அளவில் பாதித்து விட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு பல்வேறு நடிக, நடிகையரும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் டோலிவுட் நடிகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் தங்களால் இயன்ற தொகையை சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் அவர் எவ்வளவு நிதி வழங்கினார் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தனர். இயக்குநர் ராம் கோபால் வர்மா மூலம் பவன் கல்யாண் எவ்வளவு நிதி வழங்கினார் என்ற விவரம் நேற்று இரவு வெளியானது.
இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் "பவன் கல்யாண் 2 கோடி ரூபாய் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார் என்று கேள்விப்பட்டேன்.
இதனைக் கேட்கும்போதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரின் இந்த அசாதாரண செயலுக்கு நான் தலை வணங்குகிறேன். அவரின் உண்மையான சக்தி என்ன என்பதை நேற்று நான் உணர்ந்து கொண்டேன்".
என்று தெரிவித்து இருக்கிறார். ராம் கோபால் வர்மாவின் இந்த ட்விட்டர் பதிவு பவன் கல்யாண் எவ்வளவு நிதியளித்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பவன் கல்யாணின் ரசிகர்கள் பலரும் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் ராம் கோபால் வர்மா இறந்து விட்டார் என்று பவன் கல்யாணின் ரசிகர்கள் வதந்தியைக் கிளப்பி அவரை கோபப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











