திருமணச் செலவை வெள்ள நிவாரண நிதிக்குத் தருவோம்- சந்தியா
சென்னை: தனது திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை தமிழக வெள்ள நிவாரணத்திற்கு வழங்கவிருப்பதாக நடிகை சந்தியா கூறியிருக்கிறார்.
காதல் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான சந்தியா தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சுமார் 40 க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இவருக்கும் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கும் சென்னையில் நடைபெறவிருந்த திருமணம் மழை, வெள்ளம் காரணமாக நேற்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் எளிமையாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் தனது திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை சென்னை மழை நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக சந்தியா தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது "சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் பருவநிலை காரணமாகத்தான் கல்யாணத்தை எளிமையாக கேரளாவிலேயே முடித்துவிட்டோம்.
வரவேற்பு நிகழ்ச்சி கூட சென்னையில் நடத்தப்போவதில்லை. மேலும் பிரம்மாண்டமாக சென்னையில் கல்யாணத்தை மேற்கொண்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் அந்தச் செலவை, சென்னை மழை நிவாரண நிதிக்காக கொடுக்கவிருப்பதாக என் பெற்றோர் முடிவெடுத்திருக்கிறார்கள்" என்றார்.
திருமணம் எளிமையாக முடிந்தாலும் அந்தத் தொகையை மழை நிவாரணத்திற்கு அளிக்க முன்வந்திருக்கும் சந்தியா மற்றும் அவரது பெற்றோர்கள் பாராட்டத்தக்கவர்கள் தான்!


Click it and Unblock the Notifications











