கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு... கைகொடுத்த உண்மையான 'சூப்பர் ஸ்டார்கள்'
சென்னை: கனமழையால் தவித்துப் போன சென்னை மக்களுக்கு கைகொடுத்து அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை ஒருங்கிணைத்த சித்தார்த், ஆர் ஜே பாலாஜி மற்றும் கனிகா ஆகியோர் நிஜ சூப்பர் ஸ்டார்களாக அறியப்படுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக வருணபகவான் கோபம் கொண்டு தமிழக மக்களை குறிப்பாக சென்னை, கடலூர் மக்களை வாட்டி வதைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்தக் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு விடாத மழையிலும் தொண்டாற்றி அவர்களுக்குத் தேவையான உதவிகளை சமூக வலைதளங்கள் மூலமாக இம்மூவரும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

சித்தார்த்
படத்தில் சுமார் மூஞ்சி குமாராக இருந்தாலும் நிஜத்தில் சூப்பர் ஸ்டாராக தற்போது உயர்ந்திருக்கிறார் நடிகர் சித்தார்த். இவரின் வீட்டில் தண்ணீர் புகுந்த போதும் கூட பிற மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து கிடைக்கும்படி செய்து வருகிறார். நள்ளிரவில் மட்டுமின்றி சில சமயங்களில் அதிகாலையிலும் ட்விட்டர் மூலம் யாருக்கு என்ன உதவிகள் வேண்டும், உதவி செய்பவர்கள் யாரைத் தொடர்பு கொள்ளலாம் போன்ற விவரங்களை பதிவிட்டு வருகிறார்.
தொடர்ந்து
சென்னை மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து இவர் செய்து வரும் உதவிகள் உண்மையிலேயே போற்றுதலுக்கு உரியதுதான். மேலும் சென்னை மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் பணமாக அனுப்ப ஒரு பேங்க் அக்கவுண்ட்டையும் ஓபன் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சித்தார்த்தின் இந்த செயல்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தொடர்ந்து பெருகி வருகிறது.
ஆர் ஜே பாலாஜி
பிக் எப்எம் மூலம் நன்கு பரிச்சயமான ஆர்.ஜே.பாலாஜி தற்போது இந்தக் கனமழையிலும் தனது சேவையை பிக் எப்எம் மூலம் ஒருங்கிணைத்து வருகிறார். ட்விட்டர் மூலம் யாருக்கு என்ன உதவிகள் வேண்டும் என்பது தொடங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாகன உதவிகள் ஏற்பாடு செய்வதுவரை அசராது தொண்டாற்றி வருகிறார். பிக் எப்எம் அலுவலகம் மூலம் இந்த உதவிகளை அவர் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
They need blankets...they say we are shivering...can someone help us..I can specify a collection centre on ECR...
Posted by Kaniha on Friday, December 4, 2015
கனிகா
நடிகை கனிகாவின் வீட்டில் வெள்ளம் புகுந்தபோதும் அதற்கு அஞ்சாமல் ஈசிஆர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார் கனிகா. உணவு தொடங்கி குடிநீர், போர்வைகள் மற்றும் மற்ற உதவிகளை அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார் கனிகா.
மழை, வெள்ளம் இவற்றிற்கு அஞ்சாமல் மக்களுக்கு தொண்டாற்றி வரும் இவர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்களே!


Click it and Unblock the Notifications











