சி2எச் செக் மோசடி வழக்கு... நீதிமன்றத்தில் இயக்குநர் சேரன் மகள்!
சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி தருமபுரி நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
திரைப்பட இயக்குநர் சேரன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திரைப்படங்களை "சிடி' மூலம் வீட்டுக்கே வெளியிடும் வகையில் "டைரக்ட் 2 ஹோம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி (25) செயல்பட்டார். புதிய திரைப்படங்களை வெளியிட இந் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வைப்புத் தொகை பெறப்பட்டு, விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, தருமபுரி ஆட்சியர் அலுவலகப் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (28) ரூ. 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி தருமபுரிக்கான உரிமம் பெற்றுள்ளார்.
ஆனால், அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக பிரசன்னா கோரியதைத் தொடர்ந்து, ரூ. 4.53 லட்சத்துக்கான காசோலையை நிவேதா பிரியதர்ஷிணி வழங்கியுள்ளார்.
ஆனால் வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பியது. இதையடுத்து, தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் பிரசன்னா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித் துறை நடுவர் ரத்தினவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











