சின்னப் படங்களுக்கு சம்பளத்தை குறைச்சுக்கங்க - தொழிலாளர்களுக்கு சேரன் 'அட்வைஸ்'!
சென்னை: சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு சினிமா தொழிலாளர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் சேரன் மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம்:
திரைப்பட தெழிலாளர் சம்மேளனம் முன்வைக்கும் ஊதிய உயர்வை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன்? தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கிறார்களா? என்ற கேள்விக்கு ஒரே பதில் 'இல்லை' என்பதுதான்.
திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், வர்த்தக நிறுனங்களாகவும் மாறி விட்டன. விநியோகஸ்தர்களும் குறைந்து விட்டார்கள். படமெடுக்கும் குறைந்த சிலரும் நஷ்டத்தையே சம்பாதிக்கின்றனர். சினிமா லாபமான தொழில் இல்லை.
ஒரு ஆண்டில் நூறு படங்கள் வெளியாகி பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இந்த சூழலில் தொழிலாளர்கள் சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்தி கேட்பது நியாயம் அல்ல.
நூறு கோடியில் தயாரிக்கப்படும் படங்களுக்கும், ஒரு கோடியில் எடுக்கப்படும் படங்களுக்கும் தொழிலாளர்கள் ஒரே ஊதியம் வாங்குவது பாரபட்சமான அணுகுமுறை.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கி கொள்வதும் அதுபோல சிறுபட்ஜெட் படங்களில் அவர்கள் சம்பளத்தை குறைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பதுதான் நான் முன் வைக்கும் கருத்து.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications











