ஜெ. இருந்திருந்தால் அப்பாவுக்கு அவமரியாதை ஏற்பட்டிருக்காது.. பிரபு வேதனை
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு சார்பில் ரூபாய் 2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ளது.

சிவாஜி சிலை திறப்பு :
சிவாஜி மணிமண்டபத்தை அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் திறக்க வேண்டும் :
இந்நிலையில், சிவாஜி கணேசன் மகனும் நடிகருமான பிரபு, மணிமண்டபத்தை முதல்வர்தான் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பிரபு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஜெ.வின் கனவு திட்டம் :
'எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது, ஜெயலலிதாவின் கனவுத் திட்டம். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் விழாவுக்குத் தலைமையேற்று மணிமண்டபத்தைத் திறந்து வைத்து எங்கள் தந்தையின் ஆன்மாவுக்குப் பெருமை சேர்த்திருப்பார்.

ஏமாற்றம் :
தமிழக அரசு, மணிமண்டபம் அமைத்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் முதல்வரோ துணை முதல்வரோ தலை சிறந்த நடிகரின் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

எங்களுக்கு அவமரியாதை :
சிவாஜி கணேசன் தனது திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ்க் கலாசாரத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். எனவே இந்த விழாவை சிறிய நிகழ்ச்சியாக நடத்துவது எங்கள் தந்தையை அவமரியாதை செய்யும் விதமாகவே இருக்கும்.

மறு பரிசீலனை :
எனவே இதனை மறுபரிசீலனை செய்து முதல்வரும் அரசு அதிகாரிகளும் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது எங்கள் குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோள் ஆகும். நல்ல பதிலுக்காக காத்திருக்கிறோம்.' என அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











