ஜெய்பீம் பார்த்து கண்ணீர் சிந்திய சீனர்கள்.. மொழிகளை கடந்து மனங்களை கவர்ந்த சூர்யா படம்!
சென்னை: சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து இரு தரமான படங்களை எடுத்து ஆஸ்கர் கதவுகள் வரை தட்டினார் நடிகர் சூர்யா.
Recommended Video
ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றால் என்ன, மொழிகளை கடந்து பல மனித மனங்கள் அந்த படத்தை பார்த்து பாராட்டியதே அத்தனை விருதுகளுக்கும் மேலான ஒன்று தான்.
இந்நிலையில், பெய்ஜிங்கில் திரையிடப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து சீனர்கள் கண்ணீர் சிந்திய காட்சி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி தமிழ் சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சூர்யாவின் ஜெய்பீம்
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் அவர் வாதிட்ட ஒரு முக்கியமான வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ஜெய்பீம். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுக்களை அள்ளியது. ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட அந்த திரைப்படம் பல பிரபலங்களின் கவனத்தை பெற்றது.

அரசியல் எதிர்ப்பு
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வேண்டுமென்றே வில்லனாக சித்தரித்துள்ளதாக நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் ஞானவேல் மீது சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டி வழக்குகளும் போட்டன. ஆனால், சமீபத்தில் அந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டன. சீனாவில் நடைபெற்று வரும் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஜெய்பீம் திரைப்படம் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஜெய்பீம்
12வது சர்வதேச பெய்ஜிங் திரைப்பட விழாவில் வழங்கப்படும் டியாண்டன் விருதுக்கு சூர்யாவின் ஜெய்பீம் விருது தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அந்த விருது விழாவில் ஜெய்பீம் பிரத்யேகமாக தியேட்டரில் திரையிடப்பட்டது.

கண்ணீர் சிந்திய சீனர்கள்
மொழிகளை கடந்து சீனர்களையும் ஜெய்பீம் உலுக்கி எடுத்துள்ளது. மணிகண்டன் சிறையில் போலீஸாரால் அடித்து துன்புறுத்தப்படும் ஜெய்பீம் படக் காட்சியை பார்த்து சீனர்கள் கண்ணீர் சிந்தும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. நல்ல படைப்புகள் மொழிகளை கடந்து வெல்லும் என்பதற்கு ஜெய்பீம் திரைப்படம் ஒரு சிறந்த உதாரணமாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











