வேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்
அரசியலில் நுழைய வேண்டாம் என தான் கூறிய அறிவுரையை ரஜினியும், சிரஞ்சீவியும் கேட்கவில்லை என நடிகர் அமிதாப் பச்சன் வருத்தப்பட்டுள்ளார்.
Recommended Video
மும்பை: ரஜினியும், சிரஞ்சீவியும் தான் கூறிய அறிவுரையை கேட்கவில்லை என நடிகர் அமிதாப் பச்சன் வருத்தப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். 75வது வயதிலும், இன்னமும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் அவர். சிரஞ்சீவியுடன் அவர் நடித்துள்ள சை ரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து அமிதாப் பச்சனும், சிரஞ்சீவி ஒன்றாக சேர்ந்து பேட்டி கொடுத்தனர். அப்போது பேசிய அமிதாப், சிரஞ்சீவியை அரசியலில் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தியதாகக் கூறினார். அதே அட்வைஸை ரஜினிக்கும் தான் கூறியதாக அபிதாப் தெரிவித்தார். ஆனால் இருவருமே தனது அறிவுரையை கேட்கவில்லை என்றார்.

சிரஞ்சீவிக்கு அட்வைஸ்
இதுகுறித்து அவர் கூறியதாவது, "சிரஞ்சீவி ஒருநாள் என்னை பார்க்க வந்திருந்தார். அப்போது தான் அரசியலில் ஈடுபட இருப்பதாகக் கூறினார். அந்த தவறை செய்ய வேண்டாம் என நான் எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

ரஜினியிடமும் சொன்னேன்
மீண்டும் ஒரு நாள் என்னிடம் வந்தார். உங்கள் பேச்சை கேட்காமல் நான் அரசியலில் நுழைந்தேன். ஆனால் இப்போது அதில் இருந்து விலகிவிட்டேன் என்றார். அரசியலில் நுழைய வேண்டாம் என ரஜினிக்கும் நான் அறிவுரை கூறினேன். அவரும் என் பேச்சை கேட்கவில்லை" என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் சிரஞ்சீவி, கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் எனும் கட்சியை ஆரம்பித்தார். ஆனால் அவரால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து அவர் தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்துவிட்டார். சில காலம் மத்திய அமைச்சராக இருந்தார். பிறகு அரசியலில் இருந்து விலகிவிட்டார்.

ரஜினி அரசியல்
ரஜினியை பொறுத்தவரை பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அரசியலில் இறங்கும் முடிவை அறிவித்தார். ஆனால் இன்னமும் அவர் கட்சி தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











