பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்த காட்ஃபாதர்… சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சிரஞ்சீவி… ஏன் இப்படி?
ஐதராபாத்: தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மோகன்ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சல்மான் கான், நயன்தாரா முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
முன்னதாக சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

சிரஞ்சீவியின் காட்ஃபாதர்
தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் கடைசியாக 'ஆச்சார்யா' திரைப்படம் வெளியானது. கொரட்டாலா சிவா இயக்கிய இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்திருந்தார். மேலும், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் மொத்தமே 73 கோடி மட்டுமே வசூலித்து பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

கம்பேக் கொடுத்த சிரஞ்சீவி
2019ல் 'சை நரசிம்மா ரெட்டி' படத்திற்கு பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆச்சார்யா வெளியானது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில் கமர்சியல் படங்களுக்குப் பெயர் போன கொரட்டாலா சிவா இயக்கிய ஆச்சார்யா வெற்றி பெறாததால், சிரஞ்சீவி ரொம்பவே அப்செட்டில் இருந்தார். இந்நிலையில், ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்து தற்போது சிரஞ்சீவி மனம் திறந்துள்ளார். இதனிடையே சிரஞ்சீவி நடித்த 'காட்ஃபாதர்' இந்த மாதம் 5ம் தேதி வெளியாகி, அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

சம்பளம் ரிட்டர்ன்
காட்ஃபாதர் திரைப்படம் இதுவரை 100 கோடி கலெக்ஷன் செய்துள்ளதில் சிரஞ்சீவி ஹேப்பியாக இருந்த போதும், ஆச்சார்யா தோல்விக்காக தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆச்சார்யாவின் தோல்வி குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள சிரஞ்சீவி, "ஒரு படம் தோல்வியடைந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். அதை செய்வதில் எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. உண்மையில், நானும் ராம் சரணும் எங்களின் சம்பளத்தில் இருந்து 80 சதவீதத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டோம்" எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
சிரஞ்சீவியின் இந்த பேச்சு திரையுலகினர், ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 'காட்ஃபாதர்' வெற்றியை கொண்டாடி வரும் அதே நேரம், ஆச்சார்யா படத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டு சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ள சிரஞ்சீவியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல், ஆச்சார்யா படம் தோல்விதான் என்பதையும் அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டுள்ளதையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், காட்ஃபாதர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் ஒரு மலையாள படத்தை ரீமேக் செய்ய சிரஞ்சீவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











