“அரசியலில் இருந்து நான் விலகினாலும் என்னை விட்டு அது விலகவில்லை”: பஞ்ச் வைத்த சூப்பர் ஸ்டார்
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது 'காட்ஃபாதர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சிரஞ்சிவியுடன் சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'காட்ஃபாதர்' அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ஆடியோ ஆந்திராவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஹிட் அடிக்குமா காட்ஃபாதர்?
சிரஞ்சீவியின் நடிப்பில் இறுதியாக வெளியான 'ஆச்சார்யா' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'காட்ஃபாதர்' திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த காட்ஃபாதர். மற்ற மொழிப் படங்களை ரீமேக் செய்வதில் கில்லாடியான மோகன் ராஜா, 'காட்ஃபாதர்' படத்தை இயக்கியுள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய சிரஞ்சீவி ஆடியோ
சிரஞ்சீவி கேங்ஸ்டராக நடித்துள்ள 'காட்ஃபாதர்' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார்கள் சங்கமமாக உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கிலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ஆடியோ, ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரஞ்சீவி ஏற்கனவே அரசியலில் இருந்தவர் என்பதால், இப்போது இந்த ஆடியோ ட்ரெண்டாகி வருகிறது.

அரசியல் என்னை விடவில்லை
"நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை' என்று சிரஞ்சீவி அந்த ஆடியோவில் பேசி உள்ளார். இந்த ஆடியோ சிரஞ்சீவியின் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. கடந்த 2008ல் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் போட்டியிட்டு சிரஞ்சீவி உள்பட 18 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். சில வருடங்கள் அரசியலில் இருந்த அவர், அதன்பின்னர் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைத்தார். அப்படியே ராஜ்யசபா எம்.பி.யாகவும் சிரஞ்சீவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காட்ஃபாதர் பட ப்ரோமோஷனா?
அதன்பின்னர் அரசியலை விட்டு விலகியே இருந்த சிரஞ்சீவி, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனாலும், அரசியல்வாதிகள் பங்கேற்கும் சில கூட்டங்களில் பங்கேற்று வந்தார். மேலும், அவரது தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியையும் மறைமுகமாக ஆதரித்து வருகிறார். தம்பி பவன் கல்யாணின் கரத்தை வலுசேர்க்க சிரஞ்சீவி அரசியலுக்கு மீண்டும் வருகிறா என கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், அடுத்த மாதம் வெளியாகும் 'காட்ஃபாதர்' அரசியல் பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. அதில் சிரஞ்சீவி அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். அதனால் 'காட்ஃபாதர்' படத்தின் ப்ரோமோஷனாக இருக்குமா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











