மகன் தயாரிப்பில் 'கத்தி' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி
ஹைதராபாத்: மெகாஸ்டார் சிரஞ்சீவி விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் பிசியாக இருந்துவிட்டதால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். 149 படங்களில் நடித்த அவரை 150வது படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடித்துவிட்டார்.

150வது படம் என்றால் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை மாறாக தனது மகன் ராம் சரண் தேஜாவின் ப்ரூஸ் லீ படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். அப்படி என்றால் ஹீரோவாக இல்லையா என்று கேட்டால் கவலைப்படாதீர்கள் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கத் தயாராகிவிட்டார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான கத்தியை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்கிறார் சிரஞ்சீவி. படத்தை தயாரிப்பது வேறு யாரும் அல்ல அவரது மகன் ராம் சரணே தான். தெலுங்கு ரீமேக்கின் திரைக்கதையை எழுதும் பொறுப்பு முருகதாஸிடம் அளிக்கப்பட்டுள்ளது.
கத்தியை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றது போன்று கதையை மாற்ற உள்ளாராம் முருகதாஸ். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











