காட்ஃபாதர் பாக்ஸ் ஆபிஸ்… தமிழில் ரிலீஸ்… தலைவரின் பாராட்டு… சம்பவம் செய்த மெகாஸ்டார்!
ஐதராபாத்: தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மோகன்ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான், நயன்தாரா முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் காட்ஃபாதர் வெற்றியை தொடர்ந்து, தற்போது அந்தப் படம் தமிழிலும் வெளியாகிறது.

சூப்பர் ஹிட் காட்ஃபாதர்
தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள 'காட்ஃபாதர்' திரைப்படம் இந்த மாதம் 5ம் தேதி வெளியானது. மோகன்ராஜா இயக்கியுள்ள காட்ஃபாதர், மலையாளத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த லூசிபரின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் இந்தப் படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில், மிகப் பெரிய வெற்றிக்காக காத்திருந்த சிரஞ்சீவிக்கு 'காட்ஃபாதர்' சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளது. இயக்குநர் மோகன்ராஜா தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கேற்ப காட்சியமைப்புகளில் சில மாற்றங்கள் செய்திருந்தார். அதனால், படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

தமிழில் ரிலீஸ்
'காட்ஃபாதர்' படத்தை ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. முதல் 2 நாட்களில் 69 கோடி கலெக்ஷன் செய்த காட்ஃபாதர், 5 நாட்களில் 100 கோடி வசூலை கடந்தது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 110 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே காட்ஃபாதர் படத்துக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதால், தமிழில் வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் 14ம் தேதி, அதாவது நாளை மறுநாள் தமிழில் 'காட்ஃபாதர்' திரைப்படம் வெளியாகிறது. இதனை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் பாராட்டு
'காட்ஃபாதர்' படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குநர் மோகன் ராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியும் மோகன் ராஜாவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். லூசிபர் படத்தின் கதையை தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஏற்றபடி சூப்பராக மாற்றியுள்ளதாகவும், படம் Excellent, Very Nice, Very interesting என ரஜினிகாந்த் பாராட்டியதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள மோகன் ராஜா, "இது என் வாழ்க்கையில் சிறந்த தருணம்" என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சிரஞ்சீவியின் சம்பவம்
காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவியும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானும் இணைந்து நடித்துள்ளனர். இதனால் இந்தப் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை தூண்டியது. அதை பொய்யாக்காத வகையில் தற்போது படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மம்முட்டியின் 'பீஸ்மா பர்வம்' படம் தான் அது எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











