நாளை கோப்ரா ரிலீஸ்..விற்றுத் தீர்ந்த டிக்கெட்..எத்தனை தியேட்டரில் ரிலீஸ் தெரியுமா?
சென்னை : சியான் விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள 'கோப்ரா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
விக்ரம் தவிர, கே.ஜி.எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விக்ரம் 7 விதமான கெட்டப்பில் அசத்தி உள்ள படத்தைக் காண ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர்.

அஜய் ஞானமுத்து
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

டீசருக்கு கிடைத்த வரவேற்பு
இப்படத்தில்கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கி சில வருடங்கள் ஆனாலும், கதை முழுமையாக எழுதப்படாததால் படப்பிடிப்பிற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் படத்தின் டீசரும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

அதிரடி புரமோஷன்
கடந்த இரண்டு வார காலமாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சென்னை, ஐதராபாத் மதுரை, திருச்சி, கோவை மற்றும் கேரளா அனைத்து இடங்களுக்கும் விக்ரம், படத்தின் கதாநாயகிகளான ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தன் ஆகியோரும் உற்சாகமாக கலந்து கொண்டனர். இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

சிறப்புக்காட்சி
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படம் உலகம் முழுவதும் 1300 திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது. வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக ஒளிபரப்பாகும். ஆனால், கோப்ரா படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்றுத்தீர்ந்த டிக்கெட்
விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாக உள்ள படம் கோப்ரா என்பதால், விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்ரம் திரையிடப்பட உள்ள அனைத்து திரையரங்கிலும் டிக்கெட் விற்றுதீர்த்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











