எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினியின் நெருங்கிய ஆலோசகர் சோ ராமசாமி!
சென்னை: இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்த சோ ராமசாமி, தமிழகத்தின் பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர், ஜெயலலிதா, மூப்பனார், ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் ஆலோசகராகத் திகழ்ந்தார்.
எழுபதுகளில் எம்ஜிஆர் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சோ. அந்த காலகட்டத்திலேயே துக்ளக் எனும் அரசியல் நய்யாண்டி பத்திரிகையைத் தொடங்கினார். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த சோ, பின்னாளில் எம்ஜிஆர் அரசியலில் நுழைந்த போது அவருக்கு ஆலோசகராகவும் திகழ்ந்தார். எம்ஜிஆர் முதல்வர் ஆனபிறகு அவரையே விமர்சித்து துக்ளக்கில் எழுதினார். ஆனால் எம்ஜிஆர் கோபம் கொள்ளவில்லை. முக்கிய அரசியல் நடவடிக்கைகளின் போது, சோவிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டுதான் இருந்தார். குறிப்பாக நெருக்கடி நிலை காலத்தில்!

ஜெயலலிதாவை தன் மதிப்புக்குரிய தோழியாகக் கருதினார் சோ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஒரே ஆலோசகர் என்றால் அது சோதான். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட சூழலில், சோதான் அருகிலிருந்து ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்கினார். ஜெயலலிதா தனது 60வது பிறந்த நாளின் போது சோ மற்றும் அவரது மனைவிை வணங்கி ஆசி பெற்ற காட்சி இன்றும் வைரலாக வலம் வரும் புகைப்படம்.
ரஜினிக்கும் சோவுக்கும் உள்ள நெருக்கமான நட்பு உலகறிந்தது. ரஜினியின் அரசியல் வருகையை அறிவித்தவர் சோதான். ரஜினியின் பல படங்களில் சோவுக்கும் ஒரு ரோல் இருக்கும். குறிப்பாக ஆறிலிருந்து அறுபது வரை, கழுகு, குரு சிஷ்யன்... இன்று வரை ரஜினியும் சோவும் மாறாத நண்பர்கள்.
சோவை மறைந்த மூப்பனாரின் செல்ல நண்பர் என்பார்கள் அரசியல் உலகில். குறிப்பாக தொன்னூறுகளில் மூப்பனாரின் அரசியல் நடவடிக்கைகள் பெரும்பாலும் சோவின் ஆலோசனையை ஒட்டியே இருந்தன. 1996-ம் ஆண்டு தேர்தலில் ரஜினி ஆதரவுடன் திமுக -தமாக கூட்டணி உருவானதில் சோவின் பங்கு மகத்தானது. தமாக கட்சியை 48 மணி நேரத்தில் ப சிதம்பரம் உருவாக்கினார் என்பார்கள். ஆனால் உண்மையில் அதற்கு பின்னணியில் இருந்து உழைத்தவர் சோதான்.
அரசியல் மாச்சர்யங்களைத் தாண்டி முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியுடனும் சோ ராமசாமி நட்பு பாராட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











