எம்ஜிஆர் சமாதியில் குழந்தைகள்-குடும்பத்தோடு சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!

சம்பள பிரச்சினை தொடர்பாக சினிமா தொழிலாளர்களுக்கும், பட அதிபர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெப்சியை பற்றி தவறான தகவலைத் தந்து, பெப்சியை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என்று கூறியதை பெப்சி வன்மையாக கண்டிக்கிறது.
நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை இழுத்தடித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்தான். மேலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகள் அனைத்தையும் திட்டமிட்டு நிறுத்தி வருவதும் தயாரிப்பாளர்கள் சங்கம்தான். இதில் பெப்சிக்கு இம்மியளவு சம்பந்தமும் இல்லை.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய சம்பளத்தையே இன்றைக்கும் வாங்க சொல்வதையே பெப்சி மறுக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வயிற்றில் அடித்தால்...
அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது போல் வெளியாட்களை வைத்து தங்களின் உபகரணங்களை எடுத்து செல்ல அனுமதித்தால், அதை எதிர்த்து போராடுவோம்.
ஈழத்தமிழர்கள் பாதித்தபோது ராமேஸ்வரம் போக பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். காவிரி பிரச்சினைக்காக நெய்வேலி சென்று போராட பெப்சி தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால், பெப்சி தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது, மற்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வேலை செய்வோம் என்று கூறுவது, எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் தமிழ் உணர்வா?
உண்ணாவிரதம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் அமீர் மீது நடவடிக்கை எடுத்தால், அவருக்காக எந்தவித போராட்டமும் நடத்த தயாராக உள்ளோம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த செயல்களை கண்டித்தும், எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அனைவரும் தமிழக அரசு அனுமதி பெற்று, பெப்சியை உருவாக்கிய-எங்களின் 23 சங்கங்களும் உருவாக காரணமாக இருந்த எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்,'' என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











