தொடரும் ஸ்ட்ரைக்... காலா உள்பட 50 படங்கள் தவிப்பு... கண்டுகொள்ளாத மக்கள்!
சென்னை: இன்னும் இரு தினங்களில் ஒரு மாதத்தைத் தொடப் போகிறது தமிழ் சினிமா ஸ்ட்ரைக்.
முதல் பாதி நாட்கள் புதுப் படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டது. மீதி நாட்களில் படப்பிடிப்பு ரத்து, போஸ்ட் புரொடக்ஷன் நிறுத்தம்... ஏன் பிரஸ் மீட் கூட வைக்கக் கூடாது என இறுக்கிவிட்டார்கள்.

இதன் விளைவு, இந்த கோடையில் வெளியாகவிருந்த காலா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்கள் அப்படியே நிற்கின்றன. இதன் தொடர் பாதிப்பு ஆயுத பூஜை காலம், தீபாவளி, கிறிஸ்துமஸ் விடுமுறை வரை இருக்கும் என்பது பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு.
சினிமா ஸ்ட்ரைக்கால் சினிமாக்காரர்கள்தான் பாதிக்கப்பட்டார்களே தவிர, பொது மக்கள் அல்ல. தியேட்டர்கள் மூடப்பட்டபோதும் சரி, புதுப் படங்களே இல்லாதபோதும் சரி... பொதுமக்களிடமிருந்து நோ ரியாக்ஷன். குறிப்பாக தியேட்டர்கள் மூடப்பட்டதை ஒருவித வெற்றியாகவே கொண்டாடினர் மக்கள். படம் பார்க்க வருபவர்களை நடத்தும் விதம், அடிக்கும் கொள்ளைதான் இந்த மனநிலைக்குக் காரணம். தியேட்டர் என்றாலே மக்கள் விரோதமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டனர். சத்யம் குழும திரையரங்குகள் மட்டும்தான் இதில் விலக்கு. இதில் எந்த வித மிகையும் இல்லை என்கின்றனர் படம் பார்ப்பவர்கள்.
இதுதான் திரையுலகினரை உண்மையில் கவலையடைய வைத்திருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் சினிமா என்ற ஒரு தொழிலே இப்போது நடக்கும் முறையில் தொடருமா என்பது சந்தேகமே என்கிறார்கள் சினிமா உலகில்.
வெப் சீரிஸ்கள் புகழடைந்து வரும் இந்த நாட்களில் திரையுலகினர் இன்னும் பழைய முறையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருந்தால்... மக்கள் சுத்தமாக சினிமாவை மறந்துவிடுவார்கள் என்பதே உண்மை!


Click it and Unblock the Notifications











