மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸாகாதா? - தென்னிந்திய திரையுலகம் நடத்தும் ஸ்ட்ரைக்!
சென்னை : சினிமாத்துறையினர் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பலவித சிக்கல்களைக் கடந்து வெளியாகி ஒரு படம் வெற்றி பெற படாதபாடு படவேண்டி இருக்கிறது.
ஜி.எஸ்.டி வரி மற்றும் கேளிக்கை வரியால் நஷ்டம், படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு, பைரசி தளங்களால் வசூல் குறைவு என பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.
அவற்றைக் காரணம் காட்டி மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்திய சினிமா துறையினர் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 1 முதல்
கியூப், யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது எனத் தெரிகிறது.

பைரசி பிரச்னை
ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரியால் கணிசமாக உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள், படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டண உயர்வு, பைரசி தளங்களால் வசூல் குறைவு என பல்வேறு பிரச்னைகளை சினிமா சந்தித்து வருகிறது.

தெலுங்கு சினிமா
இந்த பிரச்சினைகளை அரசு சரி செய்து தரும்வரை புதிய படங்களை தயாரிப்பதில்லை, வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்து மற்ற சினிமா துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

மினிமம் கியாரண்டி ரிலீஸ்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஸ்டி வரி, கியூப் கட்டணம் இவற்றோடு தியேட்டர் பார்க்கிங் கட்டணம், மினிமம் கியாரண்டி ரிலீஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தென்னிந்திய திரையுலகம்
இதேபோன்று கேரளா, கர்நாடக மாநில திரைப்பட சங்கங்களும் கூடி விவாதித்துள்ளன. அவைகள் தெலுங்கு திரையுலகம் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதென முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் வருகிற மார்ச் முதல் தேதியிலிருந்து ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக ஸ்டிரைக் நடக்க இருப்பதாகத் தெரிகிறது.

புதிய படங்கள் ரிலீஸ் இல்லை
அதேசமயம், இதுபற்றி தொடர்ந்து இன்று மாலையும், நாளையும் ஆலோசனை நடைபெற இருக்கிறது. அதில், புதிய படங்களின் வெளியீடு பற்றி விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அதன்பின்னர், மார்ச் 1-ம் தேதி முதல் புதுப்படங்கள் வெளியீடு இல்லை என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











