Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சினிமா 100' விழா செலவுக்கு ரூ 10 கோடி- வழங்கினார் ஜெயலலிதா
சென்னை: தமிழக அரசின் உதவியுடன் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு ரூ 10 கோடி நிதி வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில், தமிழக அரசின் உதவியுடன் 4 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது இந்திய சினிமா நூற்றாண்டு விழா.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) இதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை (21-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து 22-ந்தேதி கன்னட சினிமா உலகினர் பங்குபெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கேற்கும் நிகழ்ச்சியும், 23-ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிறைவு விழா
அகில இந்திய அளவிலான திரையுலகினர் பங்குபெறும் உச்ச கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி, 24-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில முதல்வர்கள், அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், இந்தி நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் படப்பிடிப்பு ரத்து
விழாவையொட்டி, இன்று (வியாழன்) முதல், 6 நாட்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறன்றன. வெளிப்புற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதால், நடிகர்-நடிகைகள் சென்னை திரும்புகிறார்கள்.
இலவச சினிமா காட்சிகள்
சினிமா நூற்றாண்டு விழா தொடங்குவதை குறிக்கும் வகையில், தமிழக முன்னாள் முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த ‘சூப்பர் ஹீரோ' நடிகருமான எம்.ஜி.ஆரின் ‘கட்-அவுட்'டுகள் இடம் பெற்றுள்ளன. விழாவையொட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சிறந்த பழைய சினிமா படங்கள், சென்னையில் உள்ள சத்யம், உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஸ்வர்ண சக்தி அபிராமி போன்ற தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த நாடோடி மன்னன், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மாயாபஜார் (தெலுங்கு), சத்யன் நடித்த செம்மீன் (மலையாளம்) மற்றும் சத்ய ஹரிச்சந்திரா, பங்கரடா மனுஷ்யா போன்ற கன்னட படங்களும் திரையிடப்பட உள்ளன.
பூங்காக்களிலும் சினிமா
சினிமா நூற்றாண்டு விழா பற்றி பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக, சினிமா தியேட்டர்கள் தவிர மக்கள் கூடும் பொது இடங்களிலும் சினிமா காட்சிகளை திரையிட தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை ஏற்பாடு செய்துள்ளது.
சிவன் பூங்கா (கே.கே.நகர்), நடேசன் பூங்கா (தியாகராயநகர்), நாகேஸ்வரராவ் பூங்கா (மைலாப்பூர்) உள்பட சென்னையின் முக்கிய பூங்காக்களில் சினிமா காட்சிகள் திரையிடப்படும். சினிமா தவிர ‘மேஜிக்' போன்ற மற்ற பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ்
விழாவையொட்டி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
21-ந் தேதி சினிமா நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து விருதுகளை வழங்கும்படியும், 24-ந்தேதி நடைபெறும் நிறைவு விழாவை தலைமையேற்று நடத்திக் கொடுக்கும்படியும் கேட்டு, அவரிடம் அழைப்பிதழை வழங்கினார்.
ரூ.10 கோடி வழங்கினார்
அப்போது, முதல்வர் ஜெயலலிதா இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.கல்யாணிடம் வழங்கினார்.
சரத்குமார் - கேயார்
இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ஏ.கோதண்டராமய்யா (கேயார்), தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் அமீர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் செயலாளர் டி.ஏ.அருள்பதி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.