இதயத்தில் கோளாறு.. பிரபல காமெடி நடிகர் போண்டா மணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள காமெடி நடிகர் போண்டா மணி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த போண்டா மணி தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி உள்ளார்.
பாக்கியராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனுதான் படத்தில் தான் முதல் முதலில் இவர் நடித்துள்ளார்.

இலங்கை அகதியாக
இலங்கையில் மளிகை கடை வைத்திருந்த போண்டா மணி சிங்கள ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காலில் குண்டடி பட்டு இறந்திருக்க வேண்டியது. ஆனால், அதிலிருந்து குணமடைந்த நிலையில், சிங்கப்பூரில் ஒரு கடையில் வேலைக்குச் சென்றார். அங்கே பாக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தும் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. சேலத்தில் இலங்கை அகதியாக சொந்தங்களுடன் தஞ்சம் புகுந்த போண்டா மணிக்கு அப்போது அங்கே பவுனு பவுனுதான் ஷூட்டிங் நடப்பது தெரிந்து அங்கே செல்ல அவரை அடையாளம் கண்டு கொண்ட பாக்கியராஜ் முதன் முதலாக நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

போண்டா மணியான கோடீஸ்வரன்
பாண்டி பஜாரில் வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடினேன். வி. சேகரை சந்தித்து அவரது காலில் விழ பிணத்தை தூக்கி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் பெயர் கோடீஸ்வரன் என சொன்னதும் காமெடியனாக மாற தேங்காய் சீனிவாசன் போல ஒரு பெயரை வைக்க வேண்டும் என சொன்ன அவர் எனக்கு போண்டா மணி என பெயர் வைத்தார் என பேட்டி ஒன்றில் போண்டா மணி கூறியுள்ளார்.

வடிவேலுவுடன்
ஆரம்பத்தில் கவுண்டமணி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த போண்டா மணி பின்னர், வடிவேலு படங்களில் நல்ல நல்ல ரோல்களில் நடிக்க பிரபலமானார். மருதமலை பிச்சைக்காரன் ரோலை யாராலும் மறக்க முடியாது. சுந்தரா டிராவல்ஸில் மாப்பிள்ளையை அழகுப்படுத்துறேன்னு அராஜகம் பண்ணியிருப்பாங்க இப்படி ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள போண்டா மணிக்கு தற்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதயத்தில் கோளாறு
நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அவர் உடனடியாக நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

டி ராஜேந்தருக்கு சிகிச்சை
சமீபத்தில் தான் நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக அவரது மகனும் நடிகருமான சிம்பு வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், மற்றொரு சினிமா பிரபலம் உடல் நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











