சொந்த ஊரில் புது வீடு கட்டிய முத்துக்காளை.. பல வருட கனவு நிறைவேறிவிட்டதாக மகிழ்ச்சி!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டியுள்ள நிலையில், இன்று புதுமனை புகுவிழாவை நடத்தியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் நகைச்சுவை நடிகராகப் பரிணமித்தவர். வைகைப் புயல் வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளில் நடித்துப் புகழ்பெற்றார்.

சிறு வயதில் படிப்பில் கவனம் செலுத்தாததால் பல சிரமங்களை எதிர்கொண்ட முத்துக்காளை, பிற்காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது வயதைக் கடந்து கல்வி கற்று பட்டம் பெற்றார். சமீபத்தில் அவரது மகன் கல்லூரியில் சேர்ந்தது குறித்தும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
யார் இந்த முத்துக்காளை?: "செத்து செத்து விளையாடுவோமா" என்ற புகழ்பெற்ற காமெடி காட்சியின் மூலம் பலரின் நினைவுக்கு வரும் முத்துக்காளை, ஆரம்பத்தில் சண்டைக் கலைஞராகவே சினிமாவில் அறிமுகமானார். ஆனால், காலம் அவருக்கு நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் நடிப்பில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.
வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த "சிக்கன் 65" நகைச்சுவை மற்றும் "செத்து செத்து விளையாடுவோமா" போன்ற காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. வடிவேலுவின் நகைச்சுவைக்கு இணையாகத் தனித்துவமான பங்களிப்பை அளித்த வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர்.
பட்டப்படிப்பு: பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத முத்துக்காளை, திரைத்துறைக்கு வந்த பிறகு பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றதோடு, முதுகலை பட்டதாரியாகவும் உயர்ந்தார். இச்செயல், கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதைப் பலருக்கும் உணர்த்தியது. இதனால் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
கல்லூரியில் மகன்: முத்துக்காளையின் மகன் வாசன் முரளி, தற்போது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கியுள்ளார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு மளிகைக் கடை மற்றும் பவர் லூம் வேலைகள் உட்பட பல வேலைகளைச் செய்த முத்துக்காளை, பின்னர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.
சினிமாவில் சாதித்து, பட்டம் பெற்ற முத்துக்காளை, தற்போது முனைவர் பட்டம் பெறத் திட்டமிட்டுள்ளார். ஆனால், முனைவர் பட்டம் பெற 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், இப்போது அவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்வை எழுதி, முனைவர் பட்டம் பெறுவதே தனது இலக்கு என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

சொந்த ஊரில் புதிய வீடு: ஐசரி கணேஷ் உதவியால் மகனுக்கு அவரது கல்லூரியிலேயே படிக்க வாய்ப்புக் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது சொந்த ஊரான ராஜபாளையம் அருகில் சங்கம்பட்டியில், புதிதாக வீடு கட்டி, இன்று புதுமனை புகு விழாவையும் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார். "உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம்" இந்த மூன்றும் தான் ஒவ்வொரு மனிதனினின் அடிப்படைத் தேவை. இன்று புதிதாக சொந்த ஊரில் வீடு கட்டி பால் காய்ச்சிருக்கோம், இதே போல சென்னையிலும் ஒரு சொந்த வீடு கட்ட ஆசை. அனைவரும் எங்களை வாழ்த்துங்கள் எனக் கூறியுள்ளார். பல துணை நடிகர்களுக்கு சொந்த வீடு என்பது கூட பெரும் கனவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











