ICUவுக்கு மாற்றப்பட்ட ரோபோ சங்கர்.. தீவிர சிகிச்சை.. என்னதான் ஆச்சு?.. இப்போது எப்படி இருக்காரு?
சென்னை: பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மற்றும் தனது தனித்துவமான நடனத்தால் மக்களைக் கவர்ந்து பிரபலமானவர் ரோபோ சங்கர். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பால் அவர் உயர்ந்தார். அன்னைக்கு காலையில ஆறு மணி போன்ற காமெடிகள் அவருக்கு காலத்திற்கும் பெயர் வாங்கிக் கொடுக்கும் காமெடி காட்சிகள்.

சமீபத்தில் நடிகை கிங் காங் உடன் இலங்கையில் நீச்சல் குளத்தில் செம ஜாலியாக குளித்துக் கொண்டு இருந்த வீடியோ எல்லாம் வெளியானது. இந்நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்ததால் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஐசியூ: நேற்று காலை பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர், மாலையில் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப் பட்டார். தற்போது அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் 24/7 கண்காணிப்பில் ரோபோ சங்கர் இப்போது உள்ளார்.

மஞ்சள் காமாலை: இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இவருக்கு அந்த காலகட்டத்தில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் கவலை அடைய செய்துள்ளது.
ரசிகர்கள் பிராத்தனை: ரோபோ சங்கர் குணமடைந்து நல்லபடியாக வீடு திரும்புவார், நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவருக்காக நாங்களும் பிராத்தனை செய்கிறோம் என பலரும் சமூக வலைதளங்கள் மூலம், ரோபோ சங்கரின் குடும்பத்தாருக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் கூட படப்பிடிப்புத் தளத்தில் தனது மனைவி மற்றும் சக நடிகைகளுடன் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











