ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படம் - சந்திரோதயம்
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு தெலுங்கில் சந்திரோதயம் என்ற திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முதல்வரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கை சுவாரஸியமானது. பொருளாதாராத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், என்.டி.ஆரின் மருமகன் என்ற அடையாளத்துடன் அரசியலில் ஈடுபட்டார்.
என்.டி.ஆர். தனது கடைசி காலத்தில் லட்சுமி சிவபார்வதியை திருமணம் செய்து கொண்டார். இதனால் என்.டி.ஆரின் குடும்பத்தினர் வெகுண்டெழுந்தனர்.

மாமனார் ஆட்சியை கவிழ்த்த மருமகன்
லட்சுமி சிவபார்வதி கையில் கட்சி போய் விடுவதைத் தடுப்பதற்காக அனைவரும் மருமகன் சந்திரபாபு நாயுடு பின்னால் அணி திரண்டனர். மாமனாரின் ஆட்சியைக் கவிழ்த்த நாயுடு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றினார்.

ஆந்திரா முதல்வர்
1995 முதல் 2004 வரை ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தார். இப்போது பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

சந்திரோதயம்
சந்திரபாபு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு சந்திரோதயம் என்ற பெயரில் திரைப்படமாகிறது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வெங்கடரமணன் எழுதுகின்றார். மல்லிகார்ஜூன யாதவ் இப்படத்தை தயாரிக்கின்றார்.

படப்பிடிப்பு
ஆகஸ்ட் 4ல் 'சந்திரோதயம்' திரைப்படத்தின் பணிகள் துவங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆந்திரா துணை முதல்வர் சின்னராஜப்பா கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்க இருக்கிறார்.

நடிகர்கள் யார் யார்?
தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கான தேர்வுகள் முடிந்ததும் இப்படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவபார்வதி யார்?
சந்திரபாபு நாயுடுவின் வாழ்க்கையில் என்டிஆர், சிவபார்வதி தவிர்க்க முடியாதவர்கள். அந்த இருவர் கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கப் போகிறார்களோ? இந்த படம் நிச்சயம் ஆந்திராவில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











