மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த அவதூறு கருத்து.. ரோஜா சீரியல் நடிகை நேரில் ஆஜராக உத்தரவு!
தேனி : தொகுப்பாளராக தனது பயணத்தை துவக்கி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் டாக்டர் ஷர்மிளா.
இவர் சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக இவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பாளராக அறிமுகம்
டாக்டர் மாத்ருபூதத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்காகவே சின்னத்திரைக்கு தொகுப்பாளராக வந்தார் டாக்டர் ஷர்மிளா. இந்த நிகழ்ச்சி கொடுத்து புகழையடுத்து 1997ல் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 1999 முதல் சின்னத்திரையில் சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரோஜா தொடரில் நடிப்பு
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற தொடரில் செண்பகம் என்ற கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வந்தார். விசிகவின் ஆதரவாளரான இவர் பாஜக குறித்த பல சர்ச்சை கருத்துக்களை பகிர்ந்து வந்தார்.

மத்திய அமைச்சர் குறித்த அவதூறு கருத்து
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக தற்போது பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி தேனி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

போலியான கார்ட் பகிர்வு
மேலும் பிரபல தொலைக்காட்சியின் பெயரில் போலியான கார்ட் ஒன்றை இவர் பகிர்ந்து அதன்மூலம் போலியான மற்றும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இத்தகைய செயல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
இந்த புகார் எஸ்பி அலுவலகம் மூலம் ஷர்மிளா வசிக்கம் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி இந்த புகாரை விசாரித்து வருகிறார்.

நேரில் ஆஜராக உத்தரவு
இதையடுத்து டாக்டர் ஷர்மிளா இந்த வழக்கு விசாரணைக்காக தேனி சைபர் கிரைமில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரது ட்விட்டர் பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக அரங்கநாயகி தெரிவித்துள்ளார். முன்னதாக ஷர்மிளாவின் சர்ச்சை பதிவுகளை போலீசாரிடம் வசந்த் பாலாஜி ஒப்படைத்துள்ளார். அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











