twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத்தேர்தல் மல்லுக்கட்டும் சரத்- விஷால்: ஒருபக்கம் சண்டை... மறுபக்கம் சமாதானம்

    By Mayura Akilan
    |

    சென்னை: அவங்க பாண்டவர் அணி என்றால் நாங்கள் கவுரவர்களா? என்று ராதாரவி கொதித்து போய் கேட்கும் கொதி நிலையை எட்டியுள்ளது நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்.

    ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். இங்கே நடிகர்கள் சங்கத்தேர்தலுக்காக இரண்டு பட்டு கிடக்கின்றனர். இளைய தலைமுறை நடிகர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், மூத்த தலைமுறை நடிகர்கள் சற்றே தடுமாறித்தான் போயிருக்கின்றனர்.

    நடிகர் சங்கத்தில் உள்ள நாடக நடிகர்களை யார் வசப்படுத்துவது என்பதிலும் இரு தரப்பினரிடையேயும் பலத்த போட்டி நிலவுகிறது. விஷால் தரப்பும், சரத்குமார் தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.தேர்தல் நடைபெறும் முன்பாக பல்வேறு திடீர் திருப்பங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    ஒரு சங்கம் இரு அணி

    ஒரு சங்கம் இரு அணி

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய தலைவர் சரத்குமார் அணியில் ஒரு தரப்பும், புதிதாக விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி, கருணாஸ் ஆகியோர் இணைந்த பாண்டவர் அணியிலான தரப்பும் களத்தில் உள்ளன.

    சரத்குமார் அணி

    சரத்குமார் அணி

    சரத்குமார் தலைமையிலான அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத்தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 24 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ராம்கி, டி.பி.கஜேந்திரன், நளினி, நிரோஷா, கே.என்.காளை, ஜாக்குவார் தங்கம், பவன், சிசர் மனோகர், கே.ராஜன், குமரேசன், ‘ஐஸ்' அசோக், வீரமணி, ரவிக்குமார், மோகன்ராம், கே.ஆர்.செல்வராஜ். எம்.ராஜேந்திரன், பசி சத்யா, எஸ்.என்.பார்வதி, ஜெயமணி, திருச்சி மஸ்தான், மதுரை கலைமணி, புதுக்கோட்டை இசையரசன், நாமக்கல் ராஜேந்திரன், சாந்தாராம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    விஷால் அணி

    விஷால் அணி

    தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஜூனியர் பாலையா, கோவை சரளா, ராஜேஷ், பிரசன்னா, ரமணா, நந்தா, உதயா, சங்கீதா, பூச்சி முருகன், பசுபதி, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, அயூப்கான், பிரேம் குமார், ஸ்ரீமன், காமராஜ், என்.டி.விஸ்வநாதன், காளிமுத்து, ஜெரால்டு, சிவகாமி, ரத்னப்பா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    தேர்தல் அறிக்கை வெளியீடு

    தேர்தல் அறிக்கை வெளியீடு

    இரு அணியினரும் தற்போது தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்றும், டெலிபோன் மூலமும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். விஷால் அணியினர் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆதரவு நடிகர்கள் கூட்டத்தை கூட்டி, தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். அப்போது எதிரணியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள், இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் 900 நாடக நடிகர்கள் வந்திருந்தனராம். பிரபல நடிகர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்திற்காக ரூ.4.5 லட்சம் மண்டபத்திற்கு கட்டணம் செலுத்தியுள்ளனர்.

    சரத் அணியில் கூட்டம்

    சரத் அணியில் கூட்டம்

    இதற்கு பதிலடியாக சரத்குமார் அணியினரும் அதே ராகவேந்திரா மண்டபத்தில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். வரும் 11ம் தேதி மாலை கூட்டம் நடத்த உள்ளனர். இதில் சரத்குமாரை ஆதரிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் கலந்துகொள்கின்றனர். சரத்குமார் தரப்பும் ரூ. 4.5 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில், தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட உள்ள முக்கிய அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது.

    ரஜினி ஆதரவு யாருக்கு

    ரஜினி ஆதரவு யாருக்கு

    இதனிடையே நடிகர் சங்கத் தேர்தலில் கமல் ஆதரவு விஷால் அணிக்குத்தான் என்பது உறுதியாக தெரிந்து விட்டது. ஆனால் ரஜினி ஆதரவு யாருக்கு என்பதில்தான் குழப்பம் நீடிக்கிறது. ஏனெனில் இரண்டு அணியின் கூட்டமும் நடத்த ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இடம் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இரு அணியினரும் தன்னை சந்தித்த போதும் ரஜினி பிடி கொடுக்கவில்லையாம்.

    நன்றி மறந்த கமல்

    நன்றி மறந்த கமல்

    கமல் பற்றி சரத்குமார் கூறிய அந்த ‘நன்றி மறந்த' என்ற வார்த்தை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டதாம். எனவேதான் தனது ஆதரவை வெளிப்படையாக விஷால் அணிக்கு தெரிவித்துள்ளார் கமல் என்கின்றனர். அதேபோல இளம் நடிகர்கள்,ஷாம், விஷால் அணியில் இருந்து சரத் அணிக்கு போய்விட்டார். விஜய், அஜித் ஆகியோர் சரத் அணியில் இடம் பெற்றுள்ள சிம்புவிற்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்களாம்.

    புகுந்து விளையாடும் பணம்

    புகுந்து விளையாடும் பணம்

    தேர்தல் என்றாலே பணம் செலவு செய்யாமலா? ஒரு ஓட்டுக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் வரை விஷால் தரப்பு கொடுக்கிறது என்று சரத் அணி குற்றம் சாட்ட அதெல்லாம் இல்லை இது அபாண்ட குற்றச்சாட்டு என்று மறுத்துள்ளார் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர்.

    மதுரை ஆதினம்

    மதுரை ஆதினம்

    நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி வெல்லும் என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தவர் மதுரை ஆதினம். சில நாட்களுக்கு முன் மதுரை சங்கம் ஹோட்டலில், நூற்றாண்டு பெருமைகொண்ட மதுரை நாடக நடிகர் சங்கத்தினரை ஒன்றுகூட்டி, நல்ல சாப்பாடு அளித்து கைச்செலவுக்கு பணமும் கொடுத்தனர். இவை அனைத்தும் மதுரை ஆதீனத்தின் ஏற்பாடுதான் என்கின்றனர்.

    சரத்குமார் அணிக்குத் திரையுலகில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், அவர் நம்புவது நாடக நடிகர்களின் வாக்குகளைத்தான்.

    விஷால் அணிக்கு குடைச்சல்

    விஷால் அணிக்கு குடைச்சல்

    நாடக நடிகர்களை சந்தித்த விஷால் அணியினர், பாண்டி கோயில் அருகே மதுரை நாடக நடிகர் சங்கம் வாங்கிப் போட்டிருக்கும் இடத்தில் மஹால் கட்டித்தருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் மதுரை நாடக நடிகர் சங்க வாக்குகளை வளைத்துப்போடும் வகையில் சங்கம் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் ஆதினம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

    கொதித்த ராதாரவி

    கொதித்த ராதாரவி

    அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதியத்துக்கு மேல் சரத், ராதாரவி, ராதிகா, ராம்கி உட்பட பலர் வந்திருந்தனர். ராதாரவி பேசும்போது, அவன் தருகிற 500, 1,000-த்தை வாங்காதீங்க'' என்று கூறினாராம் அதே போல கூட்டத்தில் பேசிய சரத்குமார், ரஜினி, கமல் ஆதரிச்சா ஆதரிக்கட்டும். ஜனநாயக நாட்டுல அவங்களுக்கு உரிமை இருக்கு. விஜயகாந்த் இருக்கும்போதுதான் நடிகர் சங்கத்துக்கு நிறைய செய்தார்கள்னு சொல்றாங்க. நான் எவ்வளவு செய்திருக்கேன்னு அங்கு வந்து பார்த்தால் தெரியும் என்று கூறினாராம்.

    கல்வி தந்தைகள் ஆதரவு

    கல்வி தந்தைகள் ஆதரவு

    சரத் அணிக்கு ஆதீனம் ஆதரவு இருக்கிறது என்றால் விஷால் அணிக்கு கல்வித்தந்தைகள் ஆதரவு கிடைத்திருக்கிறதாம். வெளியூரில் இருந்து நாடக நடிகர்களை அழைத்து வந்து சகல வசதிகளையும் செய்து கொடுத்து திருப்பி அனுப்பும் பொறுப்பு கல்வி வேந்தர்களிடம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

    சமாதான படலம்

    சமாதான படலம்

    என்னதான் போட்டி கூட்டம், தேர்தல் பிரச்சாரம் என்று களை கட்டினாலும் இரு தரப்பினரிடமும் நடுநிலையாளர்கள் சமாதானம் பேச ஆரம்பித்துள்ளனராம். சங்கத்தில் பிளவு வேண்டாம் என்று கூறுவதோடு தலைவர் பதவியை ஒரு அணியும், செயலாளர் பதவியை ஒரு அணியும் வைத்துக்கொள்ளுங்கள் என்று பேசி வருகிறார்கள். சினிமாவில் விதவிதமான கிளைமாக்ஸ் தருபவர்கள் சங்கத் தேர்தலில் எதுமாதிரியான கிளைமாக்ஸ் தரப்போகிறார்களோ தெரியலையே?

    English summary
    Sources say that there are some compromise talks are running to solve the contest in the Nadigar Sangam elections.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X