நீதிபதிகளின் நேர்மை பற்றிய விமர்சனம்: கவிஞர் வைரமுத்து மீதான விசாரணை தள்ளிவைப்பு
சென்னை: நீதிபதிகள் பற்றிய வைரமுத்துவின் விமர்சனம் நீதித்துறை மாண்பைக் குறைப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கைலாசம் பிறந்த நாள் விழா கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நடிகர் ரஜினி காந்த், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, "இறைவன் ராமன் போன்ற நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் நெருப்பு போன்றவர்கள். நெருப்பாக வாழ்ந்தனர். அவர்களை பற்றி ஏதாவது பேசினால் நாக்கு எரிந்து விடும். அவர்கள், ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்புவரை அப்படி இருந்தனர். அந்த நேர்மையை கடைசி 6 மாதங்களில் விற்று விட்டால் நாட்டின் நிலை என்னவாகும்? எந்தவொரு சந்தேகமும் வராத அளவுக்கான நம்பிக்கையை உருவாக்கி விட்டு, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தவறுகளைச் செய்தால் என்ன செய்வது? சமுதாயத்தால் நீதித்துறை கவனிக்கப்படுகிறது," என்று பேசினார்.
இவரது இந்த பேச்சு, நீதித்துறையின் மாண்பை சீர்குலைப்பது போல் உள்ளது. எனவே, வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், சினிமா பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருகிற நவம்பர் 25-ந்தேதி கவிஞர் வைரமுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கவிஞர் வைரமுத்து உயர்நீதி மன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், "இந்த வழக்கு எங்களது டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வராது. அது மூத்த நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி தலைமையிலான டிவிஷன் பெஞ்சில்தான் விசாரணைக்கு வரவேண்டும். ஆனால் நீதிமன்ற பதிவுத்துறை எங்கள் முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளனர்," என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கை எந்த நீதிபதிகள் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
அப்போது, வைரமுத்து சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், 'வைரமுத்து நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டார். எனவே, அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராக அவருக்கு விலக்கு அளிக்கவேண்டும்," என்று கூறினார்.
இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











