கோர்ட்டு அவமதிப்பு வழக்கில்,தயாரிப்பாளர் தாணுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கலைப்புலி தாணுவிற்கு சென்னை ஐகோர்ட்டு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்களது சம்பளத்தில் 10% பிடித்துக் கொண்டு கொடுப்பதாக பின்னணிக் குரல் கலைஞர்கள் மற்றும் சீரியல் கலைஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி கலைப்புலி எஸ்.தாணு, செல்வராஜ், பிரகாஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
பின்னணி கலைஞர்கள்
சென்னை ஐகோர்ட்டில், கோடம்பாக்கத்தை சேர்ந்த ஜெ.மதியழகன், சாலிகிராமத்தை சேர்ந்த ஆர்.மகாலட்சுமி, பி.ஆர்.கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு மனுவில், ‘'தென்னிந்திய திரைப்படம், டி.வி.சீரியல் கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோம். நாங்கள் பல திரைப்படங்களில் கதாநாயகர்கள், கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளோம். இதற்காக சம்பளத்தை திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்படம், டி.வி.சீரியல் கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் கலைஞர்கள் சங்கத்துக்கு நேரடியாக கொடுத்து விடுகின்றனர்.
சம்பளத்தில் பிடித்தம்
இந்த சம்பளத் தொகையில் 10 சதவீதத்தை சங்க நிர்வாகம் பிடித்தம் செய்து, மீதமுள்ள தொகை யை எங்களுக்கு வழங்கியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘பின்னணி கலைஞர்களின் சம்பளத்தை அவர்களுக்கு நேரடியாக வழங்கவேண்டும். அந்த தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது என்று கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவை
ஆனால், இந்த தடை விதித்த பின்னரும், பின்னணி கலைஞர்களின் சம்பளத்தில் 10 சதவீதத்தை சங்க நிர்வாகிகள் பிடித்தம் செய்கின்றனர். எனவே, இந்த கோர்ட்டு உத்தரவை அவமதித்த தென்னிந்திய திரைப்படம், டி.வி. சீரியல் கலைஞர்கள் மற்றும் பின்னணி கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பிரகாஷ், தலைவர் கே.ஆர். செல்வராஜ், தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்''என்று கூறப்பட்டு இருந்தது.
கலைப்புலி தாணு
இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்தார். பின்னர், கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி கலைப்புலி எஸ்.தாணு, செல்வராஜ், பிரகாஷ் ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











