அடப்பாவிகளா...? இப்படியா ஈயடிச்சான் காப்பி அடிப்பீங்க?
சமீபகால தமிழ் திரைப்படங்களை பார்க்கும் உலக சினிமா ரசிகர்கள் இப்படித்தான் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.
போகன், பகடி ஆட்டம், நிசப்தம், வைகை எக்ஸ்பிரஸ், டோரா, காற்று வெளியிடை, இலை, ரங்கூன், உரு இவையெல்லாம் வெளியான பின்பு உலக சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று யோசிக்க வைத்த படங்கள். சில படங்களைக் கண்டுபிடித்தும் விட்டார்கள்.

ரசிகர்கள் மாறிட்டாங்க
முன்பு போல இல்லை தமிழ் சினிமா ரசிகர்கள். சினிமாவை தியேட்டர்களில் வந்து பார்ப்பதற்கான கூட்டம் குறைந்துகொண்டே போகிறது. இன்னொரு பக்கம் உலக சினிமா ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். எனவே தியேட்டருக்கு வருகிறவர்களில் பாதி பேருக்கு உலக சினிமாக்கள் பரிச்சயமாக இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலையேபடாமல் காப்பியடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நிசப்தம்
நிசப்தம் என்று ஒரு படம். பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகும் குழந்தையின் வேதனைகளை சொன்ன படம். குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் என்பது தமிழ்நாட்டில் நடக்காத ஒன்றா? இந்த முடிச்சை வைத்து அழகாக இங்கே நடந்த சம்பவத்தை வைத்தே படம் எடுத்திருக்கலாம். ஆனால் அந்த படம் ஒரு வெளிநாட்டுப் படத்தின் அட்டர் காப்பி.

இலை
இலை என்று இன்னொரு படம்... ஒரு பத்தாம் வகுப்பு மாணவி தனது தேர்வை எழுத எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பதை சொல்லியது. இதுவும் இங்கிருக்கும் பிரச்னை தான். விஷுவல் எஃபக்ட்ஸுக்காக நல்ல பெயர் வாங்கியது. ஆனால் மொத்த படமுமே ஒரு வெளிநாட்டுப் படத்தில் இருந்து உருவப்பட்டிருந்தது.

ஏன் வெளிநாட்டு காப்பி?
இதுபோல இங்கிருக்கும் பிரச்னைகளை பற்றி பேசுவதற்கு கூட வெளிநாட்டு படங்களை பார்த்து காப்பியடிக்கும் இயக்குநர்களை என்ன சொல்வது? சுயமாக ஒன்றை உருவாக்குவதற்கும் காப்பியடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சுயமாக உருவாக்குவதுதான் எப்போதுமே சிறப்பாக வரும்.

வாசிப்பு வேணும்
வாசிப்பு என்பதே நம் இயக்குநர்களிடம் இல்லாமல் போனதன் விளைவே இது. ஒன்று வாசிக்க வேண்டும் அல்லது நல்ல எழுத்தாளர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டுமே இல்லாமல் டிவிடி பார்த்து படம் எடுத்தால் இதுதான் நடக்கும். புத்தகங்கள் மட்டும் அல்ல அன்றாட செய்தித்தாள்களை கூட நம் இயக்குநர்கள் வாசிப்பதில்லை என்பதையே இந்த ஈயடிச்சான் காப்பி படங்கள் உணர்த்துகின்றன.

உரு
கடந்த வாரம் வெளியான உரு படத்தில் ஒரு காட்சியில் நாயகி ஓட்டும் காரில் ஸ்டியரிங் இடது பக்கம் இருக்கிறது. கதை நடப்பது முழுக்க தமிழ்நாட்டில் தான். அதிர்ச்சியோடு வெளியே வந்தால் படமே வெளிநாட்டு படத்தின் காப்பி என்கிறார்கள். உங்க காப்பில தீய வைக்க...
ஒண்ணும் சொல்றதுக்கில்லை...
- ஆர்ஜி


Click it and Unblock the Notifications











