அய்யப்பனைத் 'தொட்ட' விவகாரம்: ஜெயமாலா மீதான வழக்கு தள்ளுபடி!

கடந்த 2006ம் ஆண்டு ஜுன் 16ந் தேதி சபரி மலையில் தேவ பிரசன்னம் என்னும் ஜோதிட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்திய பிரபல ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணி கிருஷ்ண பணிக்கர், சபரிமலை கோவிலில் ஒரு பெண் நுழைந்ததாகவும், அதற்கு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து, கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை தேவசம் அலுவலகத்துக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார். அதில், அவர் 1986 ம் ஆண்டு சபரிமலை கோவிலுக்குள் புகுந்து அய்யப்ப சுவாமி சிலையை தொட்டு வணங்கியதாக கூறியிருந்தார்.
இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது. பெண்கள் அய்யப்பன் சந்நிதானத்துக்குள் நுழையக்கூடாது என்பது ஆகம விதி.
விசாரணையில், ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கரும், நடிகை ஜெயமாலாவும் இணைந்து பப்ளிசிட்டிக்காக இந்த சதித் திட்டத்தைத் தீட்டியதாக தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ஜோதிடர் பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி, நடிகை ஜெயமாலா ஆகியோரை முறையே முதல், 2 வது மற்றும் 3 வது குற்றவாளியாக சேர்த்து பத்தனம் திட்டை ரான்னி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஜெயமாலா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2007 ம் ஆண்டு ஜுன் 14 ந்தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2010 டிசம்பர் 13- ந் தேதி ரான்னி ஜுடிசியல் முதல் வகுப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் காலதாமதமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி தோமஸ் பி. ஜோசப், கோரிக்கையை ஏற்று, நடிகை ஜெயமாலா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி ஆகியோர் மீதான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.


Click it and Unblock the Notifications











