மச்சினி மீது கோபம்: டிவி நடிகர் கமலேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஜபல்பூர்: சோனி டிவியில் ஒளிபரப்பாகும் கிரைம் பாட்ரோல் நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்த கமலேஷ் பாண்டே மத்திய பிரதேசத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோனி டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கிரைம் பாட்ரோல். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தவர் கமலேஷ் பாண்டே(38). கமலேஷ் தனது மனைவியின் சகோதரி அஞ்சானி சதுர்வேதி மீது கோபத்தில் இருந்துள்ளார்.

அஞ்சானி தனது மூத்த மகளுக்கு தன் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து வைத்தது கமலேஷை கோபம் அடைய வைத்துள்ளது. இதையடுத்து கமலேஷ் மது அருந்திவிட்டு மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அஞ்சானியின் வீட்டிற்கு இரவு 1 மணிக்கு சென்று கதவை தட்டியுள்ளார்.
கதவை திறந்த உறவினர்கள் கமலேஷின் கையில் துப்பாக்கி இருப்பதை பார்த்து அஞ்சினர். குடிபோதையில் கோபத்தில் இருந்த கமலேஷ் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.
பின் தனது மார்பில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளார். உறவினர்கள் உடனே ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வந்து கமலேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











