நோ பார்க்கிங்கில் கார்: கன்னட முன்னணி ஹீரோ தர்ஷனுக்கு அபராதம் விதித்த பெங்களூரு போலீஸ்
பெங்களூரு: நோ-பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதற்காக, கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகன் தர்ஷன் காருக்கு அபராதம் விதித்துள்ளனர் பெங்களூரு போலீசார்.
கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தர்ஷன். 63 படங்களில் நடித்துள்ளார், 3 படங்களை தயாரித்துள்ளார். இவரிடம் ஆடி நிறுவனத்தின் கியூ-7 வகை கார் உள்ளது.
பெங்களூரு காந்திநகரிலுள்ள மதசார்பற்ற ஜனதாதள தலைமை அலுவலகத்தின் வெளியே, இன்று, இந்த காரை நிறுத்தி வைத்துவிட்டு, தனிப்பட்ட வேலைக்காக தர்ஷன் சென்றிருந்தார்.

ஆனால், கார் நிறுத்தப்பட்ட பகுதி நோ-பார்க்கிங் ஏரியாவாகும். எனவே டிராபிக் போலீசார், அந்த காருக்கு அபராதம் விதித்தனர். அப்போதுதான், காரின் பக்கவாட்டு கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்ததையும் போலீசார் கவனித்துள்ளனர். எனவே, அதற்கும் சேர்த்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த வாரம்தான், கன்னட திரையுலகின் மற்றொரு ஹீரோவான துனியா விஜய் காரில் கருப்பு பிலிம் ஒட்டியிருந்ததற்காக அபராத விதிப்புக்கு உள்ளானார் என்பது நினைவிருக்கலாம்.
செல்வாக்கு உள்ள நடிகர்களுக்கே இந்த நிலை என்றால், நம்மை போலீசார் சும்மா விட்டுவிடுவார்களா என்ற அச்சம், இவ்விரு சம்பவங்களால், பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











