தசாவதாரம் ஷூட்டிங் ஓவர்!
ரூ. 60 கோடி பட்ஜெட்டில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்க, 230 நாட்களாக நடந்து வந்த தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
| Click here for more images |
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் தசாவதாரம். கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் முதல் முறையாக பிரமாண்டப் படமான இதை இயக்கியுள்ளார். ஆசின் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் போட்டுள்ள 10 வேடங்களில் 112 வயது பெண் வேடமும் ஒன்று. ஒரே படத்தில் இப்படி படு வித்தியாசமான வேடங்களில் கமல் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆசின் தவிர மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, ரேகா ஆகியோரும் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
படம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், தசாவதாரம் தமிழ் சினிமாவின் முகத்தை, சர்வதேச அளவில் மாற்றி அமைக்கும். ஹிமேஷ் ரேஷமய்யாவின் இசை படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது. இந்த மாத இறுதியில் பாடல்கள் வெளியாகும் என்றார்.
கடந்த 230 நாட்களாக இடைவிடாமல் நடந்து வந்த தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் வியாழக்கிழமையோடு முடிவடைந்தது. அன்றைய தினம் இரவு, மாமல்லபுரம் அருகே உள்ள உத்தண்டி கடற்கரையில் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினர். அத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாம்.
இதற்கிடையே, கமல்ஹாசன் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று கோரி அழைப்பு விடுத்தாராம். மேலும், படப்பிடிப்புக்கு தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கும், உதவிக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துக் கொண்டாராம்.
விரைவில் படத்தின் ஷூட்டிங்குக்குப் பிந்தைய தயாரிப்புப் பணிகள் தொடங்கவுள்ளன. பொங்கலுக்கு படம் கண்டிப்பாக வரும் என்று கமல் ஏற்கனவே உறுதியாக கூறியுள்ளதால் பொங்கலுக்குப் படத்தைக் கொண்டு வரும் வகையில் படு வேகமாக போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெறவுள்ளனவாம்.


Click it and Unblock the Notifications











