’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’..ஆனந்தயாழை மீட்டிய முத்துகுமார் பிறந்த நாள்
சென்னை: 20 ஆண்டுகள் 1500 பாடல்கள் அத்தனையும் முத்துகள் முத்துகுமார் அளித்த கவித்துவமான பாடல்கள் அவர் மறைந்தாலும் பேசுகின்றன. இன்று அவரது பிறந்த நாள்.
வாழவேண்டிய இளம் வயதில் 41 வயதில் திடீரென மறைந்து போனார் முத்துகுமார், திரையுலகமே அதிர்ந்து போனது. வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும், உறவுகளுகளுக்கும் பாடல் எழுதியவர் முத்துகுமார்.
மண்ணின் மணம் கமழும் வரிகளுக்கு சொந்தக்காரர் முத்துகுமார், அதனால்தான் அவர் இன்றும் பேசப்படுகிறார்.

தமிழ் திரையுலகம் கண்ட கவிஞர்கள்
தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் திரைப்பாடல்கள் எழுதியுள்ளனர். இதில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பல தத்துவ, கொள்கைப்பாடல்களை இயற்றி புகழ்பெற்றார். ஆனால் சிறு வயதிலேயே மரணத்தை தழுவினார். மருதகாசி, கா.மு.ஷெரிப், கண்ணதாசன் தொடங்கி வாலி, வைரமுத்து என முத்திரைப் பதித்த கவிஞர்கள் மத்தியில் 2000 ஆண்டுகளில் இளைஞர்கள் மனம் கவரும் பல பாடல்களை எழுதினார் அந்த இளைஞர். அவரது பாடல் வரிகள் நெஞ்சில் ஊடுருவி பல கதைகளை சொன்னது. அவர்தான் நா.முத்துகுமார்.

'தெய்வங்கள் எல்லாம் ‘தந்தைக்காக எழுதிய தமிழ் திரையுலகம் போற்றும் பாடம்
1990 இறுதிகளில் சினிமாவுக்கு பாடல் எழுதத்தொடங்கிய நா.முத்துகுமார், பிறந்து வளர்ந்தது காஞ்சிபுரத்தில். இளம் வயதில் தாயை இழந்த அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் தந்தைதான். அதனால் தான் என்னவோ நா.முத்துகுமார் என்றவுடன் எல்லோர் நினைவுக்கும் வருவது அவர் தந்தை சமூகத்துக்காக எழுதிய "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே" பாடல் பெரிதாக பேசப்படுகிறதோ தெரியவில்லை. கல்லூரியில் பட்டம் பெற்றதோடு நிற்காமல், தமிழ் இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டமும் பெற்றார் நா.முத்துகுமார். படம் இயக்குவதில் ஆர்வம் கொண்ட அவர் நான்கு ஆண்டுகள் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

16 ஆண்டுகள் 16 நூல்கள், 1500 பாடல்கள்
2000-ம் ஆண்டில் தொடங்கி 16 ஆண்டுகள் தாம் மறையும் வரை 1500 பாடல்களை எழுதியுள்ளார் நா.முத்துகுமார். அவரது கடைசிப்பட பாடல் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏராளமான நூல்கள், கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மஞ்சல் காமலை நோய் பாதிப்பில் திடீரென மாரடைப்புக் காரணமாக 41 வயதில் மரணமடைந்தார் முத்துகுமார். இது திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

7 ஜி ரெயின்போ காலனி "கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை" பாடல்
அவரது பாடல்கள் அதில் உள்ள அழுத்தமான வரிகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உண்டு. "காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன்" மன்மதன் படத்துக்காக அவர் எழுதிய பாடல், "நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்" 7 ஜி ரெயின்போ காலனி படத்துக்காக அவர் எழுதிய பாடல். இந்தப்பாடல்கள் தவிர யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி.பிரகாஷ் முத்துகுமார் காம்போ படைத்திட்ட பாடல்கள் அத்தனையும் எந்தக்காலத்திலும் மறக்காத பாடல்கள். இருவர் இசையிலும் தலா ஒரு தேசிய விருதை முத்துகுமார் பெற்றுள்ளார்.

தாயின் மீது தீரா பற்று பாடலிலும் உருகி வழிந்தது..
"தனது தாயின் மீது தீராத அன்பு கொண்ட கவிஞர் '7ஜி ரெயின்போ காலனி' திரைப்படத்தில் 'நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்.. உன்னால்தானே நானே வாழ்கிறேன்.. உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்.. எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே.. எரியும் கடிதம் எதற்குப் பெண்ணே!" என்ற பாடலைத் தன் அம்மாவிற்காக எழுதினார் என்பது பலரும் அறியாத ஒன்று. அதிலும் 'அம்மா என்கிற கடிதம் என்னவென்று நான் படிக்கும் முன்னமே எரிந்துபோனதே' நான் என்னாவேன் என்று உருகியிக்கிறார் என அவரிடம் உதவியாளராக இருந்த வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விருதை பெற்றுத்தந்த 2 பாடல்கள்
முத்துகுமாரின் வார்த்தைகளில் உள்ள ஜாலங்கள் தனி ரகம், கண்ணதாசனுக்கு பிறகு இயல்பாக மண்ணின் மனம் கலந்து ஆழமாக பாடலைக் கொடுத்தது முத்துக்குமார் எனலாம். அவரது 'கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை' போன்ற வரிகள் ரசித்து ரசித்து பாடியவர்கள் ஏராளம். தங்க மீன்கள் படத்தில் அவரது "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. அதேபோல் சைவம் படத்தின் "அழகே அழகே" என்ற பாடலுக்கும் சேர்த்து 2 முறை தேசிய விருது பெற்றார்.

பாடலாசிரியர், நூலாசிரியர், வசனகர்த்தா, 2 முனைவர் பட்டம்
40 வயது ஒரு கவிஞன் நிதானப்பட்டு வரும் நேரம், பல அற்புதமான படைப்புகளை அவன் அதன் பின்னர்தான் படைக்கத்தொடங்குவான், ஆனால் முத்துகுமார் வாழ்க்கையை தொடங்கும் நேரத்தில் நம்மை விட்டு பிரிந்துள்ளார் என கவிஞர் வைரமுத்து அவரது மறைவின்போது குறிப்பிட்டார். ஆம் முத்துகுமார் இரண்டு முனைவர் பட்டங்களை பெற்றவர். 16 புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை, பட்டாம்பூச்சிகள் விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், தூசிகள் உள்ளிட்டவைகளை சொல்லலாம். சில படங்களுக்கு அவர் வசனமும் எழுதியுள்ளார்.

யுவன், ஜி.வி.பிரகாஷின் இசையில் அற்புதமான பாடல்கள்
வெயில் படத்தில் வரும் வெயிலோடு விளையாடி பாடல் ஜி.வி.பிரகாஷுக்காக எழுதிக்கொடுத்த முதல் பாடல். கிராம குழந்தைகளின் வாழ்க்கையை அப்பாடல் வரிகளில் அழகாக சொல்லியிருப்பார். முத்துகுமார் பாடல்களில் விழிகள் என வரிகள் வரும் 40 பாடல்கள் பிளாக்பஸ்டர் பாடல்கள் என்கின்றனர். யுவன், ஜி.வி.பிரகாஷ் இருவரும் முத்துக்குமாரின் மனதுக்கு நெருங்கியவர்கள். இருவருக்காக முத்துகுமார் எழுதிய 200 க்கும் மேற்பட்ட பாடல்கள் கிளாசிக் என்பார்கள். அவர் கடைசியாக எழுதிய பாடல் ராஜீவ் மேனனுக்காக சர்வம் தாள மயம் படத்துக்காக எழுதியது. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
Recommended Video

முத்துக்குமாருக்காக அன்று வைரமுத்து தெரிவித்த கண்ணீர் வரிகள்
"மழைகூடவா அழகு வெயில் கூடத்தான் அழகு என்று கூறியவன் இன்று படுத்துக்கிடக்கிறான், மரணம் கூட அழகு சொல்லாமல் சொல்கிறான், தமிழ் படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள் தமிழுக்காக உங்கள் உடலை பேணிக்கொள்ளுங்கள், உங்களை நம்பி இருப்பவர்களுக்காக பேணிக்கொள்ளுங்கள் முத்துக்குமார் மரணம் கடைசியாக இருக்கட்டும்" என கண்ணீருக்கிடையே பேசினார் கவிஞர் வைரமுத்து. "இந்த உலகம் நித்தம் மரணத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இறந்துவிட்ட எவரும் தன் மிச்சத்தை விட்டுச் செல்வதில்லை. தமிழை விட்டுச் சென்றுள்ளார் முத்துகுமார். தமிழ் உள்ளளவும் அவர் நினைக்கப்படுவார்" என வைரமுத்து இரங்கலின் போது பேசிய வரிகளையே சொல்லி முடிப்போமாக.


Click it and Unblock the Notifications











