மீண்டும் மிரட்ட வரும் டிமான்ட்டி காலனி… 2ம் பாகத்திலும் தொடரும் அருள்நிதி – அஜய் ஞானமுத்து காம்போ
சென்னை: அருள்நிதி நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.
டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை மிரட்டலான போஸ்டருடன் அறிவித்துள்ள படக்குழு, மேலும், ஒரு முக்கியமான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

ஹாரர் திரில்லர் டிமான்ட்டி காலனி
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்த டிமான்ட்டி காலனி திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. அஜய் ஞானமுத்துவின் முதல் படமான இது, ஹாரர் திரில்லர் ஜானரில் ரசிகர்களை மிரட்டும் விதமாக உருவாகியிருந்தது. பாசிட்டிவான விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தில் அஜய் ஞானமுத்துவின் மேக்கிங் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டது.

இரண்டாம் பாகம் அப்டேட்
அருள்நிதியின் கேரியரில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஒரே படம் என்றால் அது டிமான்ட்டி காலனி தான். இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர் நடிக்கும் டிமான்ட்டி காலனி 2ம் பாகத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதே கூட்டணி
டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அஜய் ஞானமுத்து எழுதுவதாகவும், அவரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி வேணுகோபால் இந்தப் படத்தை இயக்குவதாகவும் முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டிமான்ட்டி காலனி பட ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் படம் டிராப்
அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகியிருந்தது. விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்திருந்த இந்தப் படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது. இதனால் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கவிருந்த படம் ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தை தானே இயக்கலாம் என்ற முடிவுக்கு அஜய் ஞானமுத்து வந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் மூலம் திரும்பவும் கம்பேக் கொடுக்க வெறித்தனமாக ரெடியாகி வருகிறாராம் அஜய் ஞானமுத்து.


Click it and Unblock the Notifications











