சூர்யா விவகாரத்தில் நடந்தது என்ன?.. பாதிக்கப்பட்ட பெண் விளக்கம்
சென்னை: சூர்யா இளைஞர் ஒருவரை நடுரோட்டில் வைத்துத் தாக்கியதாகக் கூறும் வழக்கில் நடந்தது என்ன என்று, பாதிக்கப்பட்ட பெண் விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடுரோட்டில் வைத்துத் தாக்கி விட்டார் என்று 2 நாட்களாக பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த வழக்கில் சூர்யாவுக்கு எதிராக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் ஆதரவுக் குரல்கள் எழவும் தவறவில்லை.
சூர்யா
நடிகர் சூர்யா நடுரோட்டில் தன்னை அடித்ததாக அவர்மீது பிரேம்குமார் என்னும் இளைஞர் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார். தான் யாரையும் அடிக்கவில்லை என்று நடிகர் சூர்யா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சூர்யா மீது வழக்குத் தொடுத்திருந்த பிரேம்குமார் நேற்று அந்த வழக்கை வாபஸ் பெற்றார்.
புஷ்பா கிருஷ்ணஸ்வாமி
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணான புஷ்பா கிருஷ்ணஸ்வாமி தற்போது இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''என்னை அந்த 2 இளைஞர்களும் மிரட்டியபோது என்மீது கை வைக்க வேண்டாம் என்று அந்த இளைஞர்களிடம் கூறிய சூர்யாவிற்கு நன்றி. அந்த இளைஞர்கள் என் கார் கண்ணாடியை உடைத்து விட்டனர். இதனால் என்னுடைய பாதுகாப்புக்காக நான் கார் கதவுகளை ஏற்றி விட்டுக் கொண்டேன்.
பணம்
அவர்கள் இருவரும் பணம் கேட்டு என்னை மிரட்டினர். அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இடையில் நான் தனியாக மாட்டிக் கொண்டேன். இதுதவிர என்மீது ஆக்ஷன் எடுக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
சரியான சமயத்தில்
உங்கள் காரை நிறுத்தி அந்த இளைஞர்கள் என் மீது கைவைக்க வேண்டாம் என்று வற்புறுத்தியதற்கு நன்றி சூர்யா. சரியான நேரத்தில் உங்களின் தலையீடு இருந்தது'' என்று சூர்யாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
உங்கள் தைரியத்தை
இதற்கு நடிகர் சூர்யா ''இவ்வளவு செயல்களுக்குப் பின்னரும் என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூறிய உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள் அனைவருக்கும் நன்றி'' என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











